சிறுமிகளை கடத்த முயன்றவரை கைது செய்ய பொது மக்கள் சாலை மறியல்
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே சிறுவர், சிறுமியரை கடத்த முயன்றவரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள எப்போதும்வென்றானைச் சேர்ந்த சோலையப்பன் குழந்தைகள் கவிதா, முத்து சிவபெருமான், செந்தில்குமார் மகள் காளீஸ்வரி, பெரியசாமி மகள் சீனியம்மாள் இவர்கள் 4 பேரும் எப்போதும்வென்றானில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று விடுமுறை என்பதால் அங்குள்ள குளத்தில் குளிக்கச் சென்றனர்.
அப்போது பசுவந்தனை அருகேயுள்ள குதிரைகுளத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் சிறுவர், சிறுமிகளுக்கு பணம் மற்றும் சாக்லெட் கொடுத்து கடத்த முயன்றார். இதை அங்கு நின்ற தோட்டக்காரர் லட்சுமணன் மற்றும் பொதுமக்கள் பார்த்து ராமசாமியை பிடித்து எப்போதும்வென்றான் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஓட்டல் தொழிலாளி என்பதும், சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வரவே போலீசார் அவரை விடுவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செந்தூர் பாண்டியன் என்பவரது தலைமையில் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ மோகனும் பொதுமக்களுக்கு ஆதரவாக மறியலில் கலந்து கொண்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கோவில்பட்டி டிஎஸ்பி சுந்தர்ராஜ், தூத்துக்குடி ரூரல் எஸ்பி ஜெயக்குமார், ஓட்டப்பிடாரம் தாசில்தார் மணி ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ராமசாமியை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications