சிறுவன கடத்தி கொலை செய்த பூவரசிக்கு ஆயுள் தண்டனை
சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய காதலனின் மகனை கடத்திச் சென்று கொலை செய்து சூட்கேசில் அடைத்து பேருந்தில் வீசிய பூவரசிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிமன்றம் அதில் 90,000த்தை சிறுவனின் தாயாரிடம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜெயக்குமார்-ஆனந்தி தம்பதியின் குழந்தைகள் நிவேதிதா, ஆதித்யா (4). இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ஜெயக்குமார் பணியாற்றியபோது அவருக்கும் அவருடன் வேலை பார்த்த வேலூரைச் சேர்ந்த பூவரசிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்யுமாறு பூவரசி கூற, ஜெயக்குமார் மறுத்துவிட்டார்.
இந் நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி ஜெயக்குமார் வீட்டுக்கு வந்த பூவரசி தனியே இருந்த சிறுவன் ஆதித்யாவை அழைத்துச் சென்றார். ஆனால், தன்னுடன் வந்த சிறுவனை ஒரு கும்பல் கடத்திவிட்டதாக பாரிமுனை எஸ்பிளேனடு காவல் நிலையத்தில் பூவரசி புகார் தந்தார்.
சிறுவனை அழைத்துக் கொண்டு அரண்மனைக்காரத் தெருவில் உள்ள சர்ச்சுக்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த கும்பல் தன் முகத்தில் மயக்கப் பொடியைத் தூவிவிட்டு சிறுவனைக் கடத்திச் சென்று விட்டதாகக் கூறினார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மறுநாள் காலை சென்னையிலிருந்து நாகப்பட்டிணம் சென்ற அரசு போக்குவரத்து கழக பஸ்ஸில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்தது.இதில் சிறுவன் ஆதித்யாவின் உடல் கிடந்தது.
இதையடுத்து பூவரசியிடம் போலீசார் மீண்டும் தீவிரமாக விசாரித்தபோது,சிறுவனைக் கடத்தி கொலை செய்ததை பூவரசி ஒப்புக் கொண்டார்.
ஜெயக்குமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தனது ஆசைக்கு இணங்க வைத்து இரு முறை கர்ப்பிணியாக்கி, இரு முறையும் கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், அவருக்கு பாடம் புகட்டவே அவரது மகனை அழைத்துச் சென்று கொலை செய்து சூட்கேசில் அந்த உடலை அடைத்து, அதை கோயம்பேட்டிலிருந்து நாகை செல்லும் அரசு பஸ்சில் வைத்து விட்டு வந்து விட்டதாகக் கூறினார்.
இந்த வழக்கு சென்னை 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் 200 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கபட்டது.
இந் நிலையில் நீதிபதி சேதுமாதவன் இன்று தனது தீர்ப்பை வழங்கினார். தீ்ர்ப்பில், பூவரசி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் பூவரசிக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அதில் ரூ. 90,000த்தை சிறுவன் ஆதித்யாவின் தாயார் ஆனந்தியிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications