துபாய் பயணம்: சு.சுவாமி கேள்வி-துரைமுருகன் எச்சரிக்கை!

ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் வரதராஜன் மகள் திருமணம் வேலூரில் நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் 45,000 கோவில்கள் அரசிடம் உள்ளன. அதை எல்லாம் மீட்போம். திருச்செந்தூர் கோவிலையும் அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. இதை எதிர்த்து வழக்கு தொடர்வேன். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நகைகள் உள்ள பெட்டக சாவியை அரசிடம் தர வேண்டும் என்ற மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து இந்து தர்ம ஆச்சாரிய சபா அமைப்பிற்காக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளேன்.
சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு தீர்ப்பு இந்த மாதம் 17ம் தேதி வருகிறது. இதில் கட்டாயம் ஜெயிப்போம். தமிழகத்தில் 45,000 கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது சட்டத்துக்கு புறம்பானது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவரும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் 10 அல்லது 15 தொகுதிகளில் போட்டியிடுவோம். டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு வரும் 22ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது இந்த வழக்கை யார் முன்னின்று நடத்துவது (சி.பி.ஐயா அல்லது சுப்பிரமணிய சுவாமியா) என்பது தெரியவரும்.
ஸ்பெக்ட்ரம் இட ஒதுக்கீட்டில் மறு ஏலம் விடுவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு மார்ச் 1ம் வெளியாகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதை நிரூபிப்பேன்.
தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர கவர்னருக்கு மனு கொடுத்துள்ளேன். 3 மாதத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்றால் கவர்னர் மீதே வழக்கு தொடருவேன்.
இஸ்லாமிய வங்கி வரக் கூடாது என நான் போட்ட வழக்கு கேரளத்தில் தோல்வி அடைந்ததாக தவறாக செய்தி பரவியுள்ளது. இந்திய சட்டப்படி இஸ்லாமிய வங்கியை ஏற்படுத்த முடியாது என்ற எனது கோரிக்கையை கேரள உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. நாட்டின் சட்டவிதிகளின்படி இஸ்லாமிய வங்கி நடத்த முடியாது என்பதை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டதை அடுத்தே வழக்கு தள்ளுபடி ஆனது என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், வரும் பிப்ரவரி 25ம் தேதி, ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியில் போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
தற்போது நாட்டில் ஊழல் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மற்ற எதிர் கட்சித் தலைவர்கள் எல்லாம், ஊழலை எதிர்த்து அறிக்ககை விடுவதோடு சரி. நான் மட்டுமே ஊழலை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து, தண்டனை வாங்கி தந்து கொண்டிருக்கின்றேன்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், பல்வா கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சொந்தமாக குஜராத்தில் தனி விமானத் தளம், தனி விமானங்கள் உள்ளன. இந்த விமானம் மூலம் சோனியாவின் தங்கைகள் இருவர் துபாய்க்கு சென்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தும்படி பிரதமரிடம் கேட்டுள்ளேன்.
அமைச்சர் துரைமுருகன் அடிக்கடி துபாய் செல்கிறார். துபாயில் என்ன வேலை, இதை துரைமுருகனே விளக்க வேண்டும். விளக்காவிட்டால் நானே கண்டுபிடித்து வெளியிடுவேன்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராஜா ராஜினாமா- கைது செய்யப்பட்ட போதும், தலித் தலித் என, கருணாநிதி கூறி்னார். ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் தலித்துக்களுக்கு சொந்தமான நிலத்தை, தி.மு.க. அரசு ஆர்ஜிதம் செய்து, எம்.ஆர்.எஃப். தொழிற்சாலை அமைக்க கொடுத்துள்ளது. இதில், இருந்து கருணாநிதிக்கு தலித்துக்கள் மீது எந்தளவு பாசம் உள்ளது என்பது தெரியும்.
மக்கள் இனி ஊழலை தாங்க முடியாது என முடிவுக்கும் வந்துவிட்டனர். இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வரும் தேர்தலில் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்றார்.
சாமி வருத்தம் வழக்கு-துரைமுருகன் எச்சரிக்கை:
இந் நிலையில் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் அடிக்கடி துபாய் செல்வதாகவும், சிபிஐ கைது செய்துள்ள பால்வாவுக்கு சொந்தமான விமானத்தில் பயணிப்பதாகவும் சுப்பிரமணிய சாமி வெளியிட்டுள்ள செய்தி கண்டனத்துக்குரியது.
தமிழ் மன்ற விழாக்களுக்காக இதுவரை மூன்று முறைதான் துபாய் சென்றுள்ளேன். அதுவும் பயணிகள் விமானத்தில்தான் சென்றுள்ளேன்.
பால்வா என்பவரை புகைப்படத்தில்தான் பார்த்துள்ளேன். என்னைப் பற்றிக் கூறிய தவறான செய்திகளுக்கு சுப்பிரமணிய சாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும். தவறினால் அவரை நீதிமன்றத்தின் மூலம் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications