கூட்டணி-சீட் குழப்பம்: புதிய தமிழகம் மாநாடு திடீர் ஒத்திவைப்பு
திருவண்ணாமலை: அதிமுக கூட்டணியில் எத்தனை சீட்கள் தரப்படும் என்பது உறுதியாகாத நிலையில் புதிய தமிழகம் கட்சியின் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் இடம் பெற்றுள்ளது. இந் நிலையில் நேற்று திருவண்ணாமலையில் நடக்க இருந்த இக் கட்சியின் மாநாடு மார்ச் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கட்சியின் அமைப்பாளர் பி.சி.சாமி கூறுகையில், மாநிலத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருவதால், மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது.
வடக்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களை ஒருங்கிணைத்து தேர்தல் விழிப்புணர்வு மாநாடாக வரும் மார்ச் 5ம் தேதி இம்மாநாடு நடத்தப்படும் என்றார்.