பார்வதி அம்மாளுக்கு நாளை இறுதிச் சடங்கு-திருமா பங்கேற்பு
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த முன்னாள் எம்.பி. சிவாஜி லிங்கம் தெரிவித்துள்ளார்.
பார்வதி அம்மாளின் கணவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இறந்தார். இதையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம்தான் பார்வதி அம்மாளை கவனித்து வந்தார்.
கணவர் வேலுப்பிள்ளை மறைவுக்குப் பிறகு, உடல்நிலை மோசமடைந்த நிலையில் மலேசியாவில் உள்ள மகள் வீட்டுக்குப் போன பார்வதி அம்மாள், மேல் சிகிச்சைக்காக உரிய விசாவுடன் தமிழகம் வந்தார். அவரை விமான நிலையத்தில் இறங்க விடாமல் திருப்பியனுப்பின இந்திய, தமிழக அரசுகள்.
இதையடுத்து இலங்கை சென்ற அவரை சிங்கள் ராணுவம் சிறைபிடித்தது. அவரது நிலைமை மோசமானதால் அவரை விடுதலை செய்தது. பின்னர் அவர் தனது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள பிரதேச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேலுப்பிள்ளை-பார்வதி அம்மாள் தம்பதிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தவிர, மனோகரன், இரண்டு மகள்கள் உள்ளனர்.
இது குறித்து சிவாஜி லிங்கம் கூறியதாவது, பார்வதி அம்மாளின் மரணம் குறித்து அவரது மகன் மற்றும் மகள்களுக்கு தெரிவித்து விட்டேன். அவரின் நெருங்கிய உறவினர்களுடன் ஆலோசித்த பிறகு தான் அவருடைய இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடக்கும். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றார்.
பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்குகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொள்கிறார். மேலும், துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் தமிழகத்தின் அக்கட்சி கொடி 3 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications