சிபிஐயில் பிளவு ஏற்படுத்த சதிப் பிரசாரம்-தா.பாண்டியன் கண்டனம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சில நாட்களாக, ஒரு சில நாளேடுகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமைக்கு எதிராக சிலர், குற்றம் சாட்டி, கட்சிக்குள் கலகக் கொடி தூக்கியிருப்பதாகவும், தேர்தலுக்கு முன்னரோ அல்லது முடிந்தவுடனோ அது வெடிக்கும் என்று செய்திகள் தொடர்ந்து வெளியிட்டு வருவதைப் படித்தோம்.
தேர்தலையொட்டி ஆளும் கட்சியினரும், அவர்களால் தூண்டி விடப்பட்ட சில செய்தியாளர்களும் கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறுச் செய்திகளை திட்டமிட்டு பொய்பிரச்சாரமாக வெளியிட்டு வருகிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான இவ்வாறான தாக்குதல்களை முன்னரே சந்திருத்திக்கிறோம். அதனை கம்யூனிஸ்ட் கட்சி முறியடித்துக் காட்டியும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே காவல் துறையின் உளவு பிரிவினரின் உதவியோடு ஆளும் கட்சியும், அரசு நிர்வாகத் துறையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு எதிராக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வரே பல ஆதாரமற்ற புகார்களைக் கூறியுள்ளார்.
கட்சியின் முடிவுகளை நிறைவேற்ற முன்னணியில் நிற்போரைக் குறிவைத்துத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். காருக்கு தீவைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்டமுறையில் பல்வேறு இடையூறுகள் தரப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளை பாதுகாக்கின்ற கடமையில் மட்டும் தான் உறுதியாக செயல்பட்டிருக்கிறார்கள்.
அரசுக்கு மிகவும் ஆதரவாக சில ஏடுகளில் ஆதாரமற்ற கற்பனைக் குற்றச் சாட்டுக்கள் வெளியிடபட்டுள்ளன. குழப்பச் செய்திகளை வெளியிட்டு கலக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன.
கடந்த நான்காண்டுகளாக தொடர்ந்து அரசியல், நிர்வாகத் தாக்குதல்களுக்குப் பணியாது, கலங்காது, கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த, முடிவுகளை நிறைவேற்றி வருகிறது கட்சியின் தலைமை.
இதே நேரத்தில் அவதூறாக வெளியிட்டு வரும் பத்திரிக்கைச் செய்திகளால் கட்சித் தோழர்களும், ஆதரவாளர்களும் குழப்பமடைய மாட்டார்கள். ஆனாலும் மீண்டும் மீண்டும் பொய்ச் செய்தி பரப்பப்படுவதால், அதை மறுக்க வேண்டிய கடமையுணர்வுடன் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஜனநாயத்தையும், தமிழ்நாட்டுப் பண்பாட்டையும் மீட்க வேண்டிய கடமை இன்று தமிழக மக்கள் முன் நிற்கிறது. தேர்தல் களத்தில் இதனை நெஞ்சில் நிறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களால் அவர்களின் கட்டுப்பாட்டையும் உறுதியையும் யாராலும் குலைக்க முடியாது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் அணி அமைப்பு, தேர்தல் பணிகள் சம்பந்தமாகப் பேசி வருகிறோம், ஒரிரு நாட்களில் விவரங்களை வெளியிட உள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications