திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராசாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராசாவை, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சந்தித்து நலம் விசாரித்தார்.
நேற்று மாலை இந்த சந்திப்பு நடந்தது. சிறையில் உள்ள பார்வையாளர் அறையில் வைத்து ராசாவை சந்தித்து நலம் விசாரித்தார் பாலு. ஏற்கனவே ராசாவின் மனைவி பரமேஸ்வரி, அவரை கடந்த வெள்ளிக்கிழமையன்று சந்தித்துப் பேசினார் என்பது நினைவிருக்கலாம்.
ராசாவுடனான சந்திப்பு குறித்து பாலு கூறுகையில், ராசாவுக்கு ஏற்கனவே அல்சர் பிரச்சினை உள்ளது. தற்போது சிறை வாசத்தால் அது அதிகரித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்தே அவரை சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன்.
ராசா எங்களது கட்சியின் எம்.பி. ஆவார். எனவே கட்சி ரீதியாகவும் அவருக்கு ஆறுதலும், ஆதரவும் தெரிவிக்க வேண்டியது எனது கடமை. அதை செய்துள்ளேன். ராசா தைரியமாக உள்ளார். வழக்கு குறித்து கவலைப்பட வேண்டாம் என்று அவரிடம் தெரிவித்தேன் என்றார்.
ராசாவுக்கு சாதகமாக நடந்தனரா தமிழக போலீஸார்?
இந்த நிலையில் திகார் சிறையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ராசாவுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திகார் சிறையின் வெளிப்புறப் பாதுகாப்புப் பணியில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் பணி இது நாள் வரை எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளானதில்லை. மாறாக பெரும் பாராட்டுக்களைப் பெற்று வந்துள்ளது. மிகச் சிறப்பான முறையில் திகார் சிறையைக் காத்து வருவதாக அவர்களுக்கு நிரந்தரமான பாராட்டு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் முதல் முறையாக அவர்கள் மீது பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராசாவுக்கு சாதகமாக அவர்கள் நடந்து கொண்டு, சிறை விதிமுறைளை மீறி, ரகசியப் பார்வையாளர் ஒருவரை ராசாவை சந்திக்க அனுமதித்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் ராசாவை அவரது அரசியல் உதவியாளர் ஒருவர் ரகசியமாக வந்து பார்த்து விட்டுச் சென்றதாகவும், அதை சிறை விதிகளை மீறும் வகையில் தமிழக போலீஸார் அனுமதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனது வருகை குறித்து உரிய பதிவேட்டில் அந்த நபர் பதிவு செய்யவில்லை என்றும், இது கூறப்படுகிறது.
மேலும், ராசாவுடன், தமிழக சிறப்புப் போலீஸார் தமிழிலேயே பேசுவதாகவும், இதனால் அவர்களைச் சுற்றிலும் உள்ளவர்களுக்கு அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது புரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் சிறை விதிகளுக்குப் புறம்பாக சிறை வளாகத்தில் உள்ள கேன்டீனுக்கு அவ்வப்போது ராசாவை, தமிழக சிறப்புக் காவல் படையினர் அழைத்துச் செல்வதாகவும், இதற்குரிய அனுமதியை அவர்கள் சிறை அதிகாரிகளிடமிருந்து பெறுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இந்தப் புகார்களை சிறை இயக்குநர் நீரஜ் குமார் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சிறையின் வெளிப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் மட்டுமே தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைக்கு உள்ளே அடைக்கப்பட்டுள்ள யாரையும் பார்க்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் ராசாவுக்கு எந்தவித சிறப்புச் சலுகையும் காட்டப்படவில்லை என்றும் விதிமுறைகள் மீறப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications