அரசு பஸ் ஓடைக்குள் கவிழ்ந்து புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி, 15 பேர் காயம்
விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே அரசுப் பேருந்து ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்திலிருந்து நேற்று சாத்தூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுப்பட்டி அருகே செல்லும்போது திடீரென பேருந்து நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள ஓடைக்குள் கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த வவ்வால் தொத்தி வின்சென்ட் மகன் பிரதீப், நாகலாபுரம் மேகலிங்கம் மகன் ராஜாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் நாகலாபுரம் முனியசாமி, கருப்பசாமி உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான ராஜாசங்கருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பலியான பிரதீப் நாகலபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.












Click it and Unblock the Notifications