லிபியா கலவரத்தில் சிக்கி மசூதியில் தஞ்சமடைந்துள்ள 24 நெல்லை தொழிலாளர்கள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: லிபியா கலவரத்தில் நெல்லை மாவட்டம் தலைவன் கோட்டையைச் சேர்ந்த முருகையா பாண்டியன் என்ற தொழிலாளி கொல்லப்பட்டுள்ள நிலையில் கலவரத்திலிருந்து தப்பிய 24 தமிழக தொழிலாளர்கள் அங்குள்ள மசூதி ஒன்றில் தஞ்சமடைந்து உயிரைக் கையில் பிடித்தபடி தவித்து வருகின்றனர்.

லிபியாவில் பெரும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. புரட்சியில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும், அதிபர் கடாபியின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கலவரத்தில் சிக்கி தலைவன்கோட்டையைச் சேர்ந்த தொழிலாளி முருகையா பாண்டியன் என்பவர் உயிரிழந்துள்ளார். அசோக் குமார் என்ற இன்னொரு தொழிலாளி படுகாயமடைந்துள்ளார்.

இவர்கள் தவிர மேலும் 24 நெல்லை மாவட்ட தொழிலாளர்களும் அங்கு சிக்கியுள்ளனர். இந்த 26 பேரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குப் போனவர்கள் ஆவர். ஏற்னவே இவர்களுக்கு உரிய சம்பளம் தரப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக அவர்களது குடும்பத்தினர் அரசிடம் முறையிட்டு, அனைவரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்று கோரி மனு தந்திருந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்கள் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் தலைவன்கோட்டையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருந்த இடத்துக்கு வந்த போராட்டக்காரர்கள் அங்கு குண்டுவீசி தாக்குதல் நடத்தப் போவதாகவும், தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறிவிடும்படியும் எச்சரிக்கை விடுத்தார்களாம். உடனே தொழிலாளர்கள் ஒரு வாகனத்தை ஏற்பாடுசெய்து புறப்படத் தயாரானபோது குண்டு வீசப்பட்டதாகத் தெரிகிறது.

இதில் சிக்கித்தான் முருகையா பாண்டியன் உயிரிழந்தார். காயமடைந்த அசோக்குமார் ஆலங்குளத்தைச் சேர்ந்த நாகல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்துபோன முருகையாவுக்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

உயிர் பிழைத்தவர்கள் தலைவன்கோட்டையில் உள்ள உறவினர்களைத் தொடர்புகொண்டு தாங்கள் அனைவரும் உணவு, தண்ணீர் இல்லாமல் இருப்பதாக அழுது புலம்பியுள்ளனர். அனைவரும் ஒரு மசூதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களிடமிருந்து தற்போது எந்தத் தகவலும் இல்லாததால் அவர்களின் மனைவியர், குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள் பெரும் கவலையிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். அவர்களது கிராமங்களில் சோகம் சூழ்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+