திண்டிவனம் முருகானந்தம் கொலை-சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கு
சென்னை: கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது திண்டிவனத்தில் பாமகவினர் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஓட்டுநராக இருந்த முருகானந்தம் வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐயிடம் விடக் கோரி அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குதான் அதிமுக, பாமக இடையிலான உறவு கசந்து போக முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக கூட்டணிக்கு பாமக போய் விட்ட நிலையில் மீண்டும் இந்த விவகாரத்தை அதிமுக கையில் எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், 2006ம் ஆண்டு முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டார். பாமகவினர்தான் இந்தக் கொலையைச் செய்தனர்.
இந்த வழக்கில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலரின் பெயர்களை சேர்க்காமல் காவல்துறை விட்டு விட்டது. இதுதொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ராமதாஸ் உள்ளிட்டோரின் பெயர்களைச் சேர்க்க உத்தரவிடப்பட்டும் இதுவரை சேர்க்கப்படவில்லை.
எனவே இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தால்தான் நியாயம் கிடைக்கும். நேர்மையான விசாரணை நடைபெறும். எனவே இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று கோர்ட் பரிசீலித்தது. அப்போது அரசுத் தரப்பில் 2 வார காலம் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கை பெஞ்ச் ஒத்திவைத்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications