தேர்தல் பணிகளுக்கு துணை ராணுவம்: ஆணையத்திற்கு சென்னை ஹைகோர்ட் பரிந்துரை
மதுரை: தமிழக சட்டசபைத் தேர்தலில் துணை ராணுவத்தை பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அதிமுக வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் மே மாத தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
கடந்த மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் காங்கிரஸ்- திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் அரசு எந்திரத்தையும் அந்த கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தின.
மேலும், சமூக விரோதிகளையும், ரவுடிகளையும் பயன்படுத்தி வாக்குச்சாவடிகளில் கத்தி முனையில் தேர்தல் அதிகாரிகளை மிரட்டி தேர்தலை சாதகமாக்கிக் கொண்டனர். தமிழக டி.ஜி.பி. உள்பட யாரும் இதை தட்டிக் கேட்கவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலில் திருமங்கலம், வந்தவாசி, பென்னாகரம், திருச்செந்தூர் போன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு மது, பிரியாணி, பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்றனர்.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தேர்தலை நேர்மையுடன் நடத்த தமிழக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறையினர் ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படக் கூடாது. ஒட்டு மொத்த தேர்தல் மற்றும் ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றை துணை ராணுவத்தைக் கொண்டு நடத்த முன்வர வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுத்துள்ளேன்.
எனவே, இதற்கான நடவடிக்கையில் ஈடுபட தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி. எஸ். சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், தேர்தலை எவ்வாறு நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையமே முடிவு செய்யும். எனவே, தமிழகத்தில் நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவது, தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.
மனுவில் கூறப்பட்டுள்ள குறைபாடுகளை ஆதாரங்கள் இன்றி நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. குறைபாடுகள் இருப்பின் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுதாரர் கூறி நிவாரணம் பெறலாம்.
எனவே, மனுதாரர் மனு மீது தேர்தல் ஆணையம், சட்டத்தின் அடிப்படையில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications