காமன்வெல்த் ஊழல்-லலித் பனோட், வர்மா கைது: அடுத்து கல்மாடி?
டெல்லி: சுரேஷ் கல்மாடிக்கு நெருக்கமான லலி்த் பனோட், வி.கே. வர்மா ஆகியோரை, காமன்வெல்த் ஊழல் வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளது.அடுத்து கல்மாடியும் கைதாவார் என்று தெரிகிறது.
காமன்வெல்த் போட்டிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்தவர் கல்மாடி. அவர் கடந்த 4 வாரங்களுக்கு முன் தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஒருங்கிணைப்புக் குழுவின் செகரடரி ஜெனரலாக இருந்தவர் பனோட். டைரக்டர் ஜெனரலாக இருந்தவர் வர்மா.
கைதான இருவரிடமும் சுவிட்சர்லாந்து நாட்டு கம்பெனிக்கு கொடுக்கப்பட்ட ரூ. 107 கோடி கான்ட்ராக்ட் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,
குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் தங்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டு கம்பெனி மற்றும் சிலருடன் சேர்ந்து முறைகேடுகள் செய்துள்ளனர். இதனால் அரசுக்கு ரூ. 107 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
கல்மாடியின் 2 உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து கல்மாடியை கைது செய்யக்கூடும் என்று தெரிகிறது. கல்மாடியின் உதவியாளர்கள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பலர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அடுத்த இலக்கு கல்மாடியாகத் தான் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாத இறுதியில் சிபிஐ அதிகாரிகள் கல்மாடியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கென் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். எனவே, கல்மாடி எந்த நேரமும் கைதாகலாம்.
அரசு மீது கல்மாடி பாய்ச்சல்:
இதற்கிடையே, காமன்வெல்த் தொடர்பான அனைத்து விவகாரங்களுக்கும் மத்திய அரசுதான் பொறுப்பு என்று கல்மாடி கூறியுள்ளார்.
இதற்கிடையே ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நிருபர்களிடம் கல்மாடி கூறியதாவது,
காமன்வெல்த் முறைகேடு தொடர்பாக சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு தர நான் தயாராக இருக்கிறேன். என்னை அச்சுறுத்த சிபிஐ எனது உதவியாளர்களை கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகளை விசாரிக்கும் சிபிஐ இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அரசு அதிகாரிகளை ஏன் விசாரிக்கவில்லை? இதற்கு காரணமான மாநில நிர்வாகத்தை நான் கண்டிக்கிறேன். நான் மத்திய விளையாட்டுத் துறையின் ஒப்புதலுடன் தான் அனைத்து நடவடிக்கைளும் மேற்கொண்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications