ஸ்பெக்ட்ரம் ஊழல்: ஜேபிசியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் தம்பிதுரை

திமுக சார்பில் டி.ஆர்.பாலுவும், அதிமுக சார்பில் தம்பிதுரையும் குழுவில் இடம் பிடித்துள்ளனர்.
முதலில் 21 பேரைக் கொண்ட ஜேபிசியை அமைக்க காங்கிரஸ் முடிவு செய்திருந்தது. ஆனால் அனைததுக் எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கியதாக ஜேபிசி இருக்க வேண்டும், எனவே 30 பேர் கொண்டதாக குழுவை அமைக்க வேண்டும் என்று பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
இதையடுத்து 30 பேர் கொண்டதாக ஜேபிசியை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்தக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்தை மக்களவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
அதில் இந்தக் கூட்டுக் குழுவில் 15 பேர் ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்களாகவும், 15 பேர் எதிர்க் கட்சியினராகவும் இருப்பர் என்றும், மொத்த எம்பிக்களில் 20 பேர் லோக்சபாவையும் 10 பேர் ராஜ்யசபாவையும் சேர்ந்தவர்களாகவும் இருப்பர் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில் இந்தக் குழுவில் இடம் பெறும் எம்பிக்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.
அதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த கிஷோர் சந்திர தியோ, பபான் சிங், ஜே.பி.அகர்வால், ஜிதேந்திர ஹூடா, பி.சி. சாக்கோ, டி.ஆர்.பாலு, கல்யாண் முகர்ஜி உள்ளிட்டோரும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, ஹரின் பாதக், ஷரத் யாதவ், கோபிநாத் முண்டே, தாரா சிங் செளஹான், அகிலேஷ் யாதவ், குருதாஸ் தாஸ்குப்தா, அர்ஜூன் சரண் சேத்தி, தம்பிதுரை ஆகியோரும் அடக்கம்.
குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. இருப்பார். அனேகமாக இந்தப் பொறுப்பு கேரளாவைச் சேர்ந்த பி.சி.சாக்கோவுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.
முன்னதாக இதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்து பிரணாப் பேசுகையில், ஜேபிசி அமைக்காததற்கு அரசின் ஆணவம் காரணமல்ல. இந்த கூட்டத்தொடரை அமைதியாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நீதிமன்றக் கண்காணிப்பில் நடைபெற உள்ள இந்த ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை விசாரிக்கும் ஜேபிசி குழு, தனது அறிக்கையை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்குள் தாக்கல் செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications