63வது பிறந்த நாள்: மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் ஜெயலலிதா-சசிகலா, தேர்தலில் வெல்ல பூஜை

இதற்காக தனி விமானத்தில் அவர் இன்று மைசூர் சென்றார். காலை 10 மணிக்கு போயஸ் கார்டனில் இருந்து தோழி சசிகலாவுடன் விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்ட அவரை
வீட்டு வாசலில் தலைமைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதையுடன் அனுப்பி வைத்தனர்.
காலை 10.55 மணிக்கு தனி விமானத்தில் மைசூர் புறப்பட்ட அவரை விமான நிலையத்தில் ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர்கள் ஓ. பன்னீர் செல்வம், மதுசூதனன், தளவாய்சுந்தரம், செங்கோட்டையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் பி.எச். பாண்டியன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வழி அனுப்பினர்.
ஜெயலலிதாவுடன் உதவியாளர் பூங்குன்றம், பாதுகாப்பு அதகாரி பெருமாள்சாமி ஆகியோரும் சென்றனர்.
மைசூர் மண்டகாளி விமான நிலையத்திலிருந்து புல்லட் புரூப் செய்யப்பட்ட காரில் சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்ற ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்புப் பூஜை செய்தார். இதையொட்டி கோவிலில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
20 நிமிடங்கள் கோவிலில் வழிபாடு செய்த ஜெயலலிதா வெளியே வந்தவுடன் அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். ஆனால், பேட்டியளிக்க மறுத்த ஜெயலலிதா, இது வழிபாட்டுத் தலம். இங்கே அரசியல் பேச முடியாது என்று கூறிவிட்டுக் கிளம்பிய ஜெயலலிதாவை நிருபர்கள் தொடர்ந்து வற்புறுத்தியடுத்து, தமிழகமும் கர்நாடகமும் அண்டை மாநிலங்கள். இரு மாநில மக்களும் நட்புறவோடு வாழ வேண்டும் என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.
பின்னர் மைசூரில் இருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.
கேக் வெட்டிய மது-ஓ.பிக்கு ஊட்டினார்:
அவரது பிறந்த தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இன்று ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டப்பட்டது. காலை 10 மணிக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் 63 கிலோவில் தயாரிக்கப்பட்ட பிறந்த நாள் கேக்கை பயபக்தியுடன் வெட்டினர்.
கேக்கை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வெட்டி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஊட்டினார். அப்போது புரட்சித் தலைவி வாழ்க என்று தொண்டர்கள் கோஷமிட்டார்கள்.
தலைமை கழகத்தில் குவிந்திருந்த தொண்டர்களுக்கு கேக் பரிமாறப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டன. பட்டாசு வெடித்து பிறந்தநாளை தொண்டர்கள் கொண்டாடினர்.
முன்னதாக பிறந்தநாள் மலரை மதுசூதனன் வெளியிட தர்மபுரி மாவட்டச் செயலாளர் முனுசாமி பெற்றுக் கொண்டார்.
மகளிர் அணியினர் லில்லி கல்பனா தலைமையில் பெரம்பூரில் இருந்து திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு 63 பெண்களுடன் பாதயாத்திரையாக சென்று சிறப்பு பூஜை செய்தனர். துறைமுகம் பகுதியில் நாகமணி அம்மாள் தலைமை யில் 63 பெண்கள் பால்குடம் எடுத்தனர்.
மேலும் கோவில்களில் தங்கத் தேர் இழுப்பது, சர்ச்கள், தர்க்காக்களில் சிறப்பு வழிபாடுகளை அதிமுகவினர் நடத்தி வருகின்றனர். ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.












Click it and Unblock the Notifications