பாலக்கோட்டில் நாளை அதிமுக போராட்டம்!
சென்னை: தி.மு.க. அரசைக் கண்டித்து தர்மபுரி மாவட்ட அதிமுக சார்பில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு பாலக்கோடு பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் கண்டனப் போராட்டம் நடைபெறும் என, ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி பெறும் வகையில் நான்கு திட்டங்கள் தீட்டப்பட்டு, அதில் கிருஷ்ணகிரி வலதுபுறக் கால்வாயை நீட்டித்து 34 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் எனது ஆட்சிக் காலத்திலேயே முடிக்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்தின் காரணமாக மற்ற மூன்று திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. தி.மு.க. அரசு, கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பாப்பாரப்பட்டி ஏரி திட்டத்திற்கு மட்டும் தான் நிதி ஒதுக்கீடு செய்தது.
மற்ற இரண்டு திட்டங்களான பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை எரணஹள்ளி ஏரி, புலிக்கரை ஏரி போன்ற 14 ஏரிகளுக்கு எடுத்துச் செல்லும் திட்டம் மற்றும் செங்கன்பஸ்தலாவ் ஏரியிலிருந்து தண்டுகரண ஹள்ளி, கொண்டசாமனல் ஏரி போன்ற 10 ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டம் ஆகியவற்றை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கழகத்தின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே, தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை கால்வாய் மூலம் 24 ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் இரு திட்டங்களை கிடப்பில் போட்டுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்து நாளை தர்மபுரி மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணி அளவில், பாலக்கோடு பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, எம்.பி., தலைமையிலும், தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும்.
-இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.