தேடாமலே கிடைத்த தீந்தமிழ்க் கொடையே!-ஸ்டாலினுக்கு ஜெகத்ரட்சகன் பிறந்த நாள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

Stalin
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் கவிதை மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உருகி உருகி ஜெகத்ரட்சகன் எழுதியுள்ள அந்தக் கவிதை:

நீர் கொண்ட சாயல் நிழல் கொண்ட வதனம் போர் கொண்ட நெஞ்சம் புகழ்கொண்ட வாழ்க்கை தான்கொண்ட எங்கள் தளபதியே!

உன்னைத் தேன்கொண்ட தமிழால் தித்திக்க வாழ்த்துகிறேன்!

கற்பூர வாசனையும் கமலப்பூ வாசனையும் அற்புதமாய் மணக்கின்ற அருந்தமிழால் வாழ்த்துகிறேன்!

கடல் வானம் உள்ளளவும் கலைஞர் தமிழ் உள்ளளவும் மகத்தான சாதனைகள் மலர்வித்து வாழிய நீ!

ஒருவரின் தோளேறி உயரம் கொள்ளாமல் துயரத்தின் மேலேறித் தொடர்ந்து ஜெயித்தவனே!

மிசா எனும் பெருந்தீயில் மேன்மையுறக் குளித்தவனே!

மேயரெனும் தங்கமாக மின்னிச் சிரித்தவனே!

அரவிந்தனாய் நடித்தாய்: அதுவன்றிப் பொதுவாழ்வில் ஒருபோதும் நடித்தறியா உள்ளம் படைத்தவனே!

இரவல் வெளிச்சத்தில் இரவில் ஒளிர்கின்ற சந்திரனாய் இல்லாமல் சூரியனாய் வளர்ந்தவனே!

மாதர்கள் மனக்கணக்கில் மகிழ்ச்சிகளை வரவு வைக்க மணிக்கணக்கில் நின்றபடி சுழல்நிதிகள் தந்தவனே!

முத்தநிதி சொரிகின்ற முகிலைப்போல்... மகளிர்க்கு மொத்தநிதியும் வழங்கி முன்னேற்றம் ஈந்தவனே!

விரல்கீறி ரத்தத்தை வெளிப்படுத்தி பொட்டிட்டுக் கொடிகண்டு பிடித்த கொற்றவனின் மகனென்னும் தகுதியால் அரசியலில் தலையெடுக்கவில்லை நீ!

உழைத்தாய்; தன்னலத்தை உதிர்த்தாய்; துயில்கூடத் தவிர்த்தாய்; எதிர்ப்புகளில் தழைத்தாய்; தொண்டர்களை நற்றாய்போல் தழுவி நடந்தாய்; அதனால்தான் பெற்றாய் பதவிகளை பீடுமிகப் பெற்றவனே!

தேடாமலே கிடைத்த தீந்தமிழ்க் கொடையே!

திசையதிர வந்த திராவிடப் படையே!

மீன்நோக்கும் கொக்குகளும் தேன்நோக்கும் வண்டுகளும் சூழ்ந்திருக்கும் தேசத்தில் தொண்டுமட்டுமே நோக்கிச் சுற்றிச் சுழன்றுவரும் சூறாவளி நீதான்!

நல்லவர்கள் உச்சரிக்கும் நாமாவளி நீதான்!

உன்னை வாழ்த்துவதும் உண்மையில் நம் கழகம் தன்னை வாழ்த்துவதும் சமமென்று கருதுகிறேன்!

மணவறை கண்ட மகிழ்ச்சி நிறைவதற்குள் சிறைக்கூடம் கண்ட செந்தமிழ்க் காளையே!

இல்லறத்தை விடவும் இன்பத் தமிழ்நாட்டில் நல்லறத்தை வாழவிட நரம்புகள் துடித்தவனே!

“தன்னை விதைத்தார்க்கே சரித்திர ஏடுகளில் சாதனை அறுவடை சாத்தியம் என்னும் போதனை எங்கட்குப் புரிய வைத்தவனே!

வேதனை துடைக்கும் விரலாகப் பிறந்தவனே!

மெல்லச் சிரித்தாலும்... மெல்ல நடந்தாலும்... வெள்ளத்தின் வேகத்தை வெல்லத் தெரிந்தவனே!

அமைதியாய் இருந்தாலும்... அடக்கமாய்த் திகழ்ந்தாலும்... ஒளியின் வேகத்தை உள்ளத்தில் கொண்டவனே!

மாற்றார் இகழ்ந்தாலும்... மாக்கோபம் கொள்ளாமல் ஆற்றலுடன் எடுத்து... அடுத்தஅடி வைப்பவனே!

என்போன்ற தொண்டர்க்கு எப்போதும் தலைவனே!

இயக்கப்பால் குடித்து இப்போதும் வளர்பவனே!

தேனாளும் தமிழைத் தினமாளும் எம் தலைவன் பேராள வந்த பெருமைகளின் பெட்டகமே!

பாராளும் தத்துவங்கள் பண்போடு கற்றவனே!

கலங்காத எஃகென்னும் காரணப் பெயர்கொண்ட கலங்கரை விளக்கமே!

கலைஞரின் முழக்கமே!

அஞ்சுகத்தாய் பேரனே!

அறிவாலய வீரனே!

அஞ்சுவது யாதொன்றும் அறியாத தீரனே!

ஆயிரம் பிறைகண்டு அதன்பின்னும் வாழிய நீ!

பாயிரம் நான் பாடுகிறேன்... பைந்தமிழாய் வாழியவே!

என்று கவி பாடியுள்ளார் ஜெகத்ரட்சகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+