லிபியாவில் இருந்து கிளம்பிய 200 தமிழர்கள்: தலைவன்கோட்டையினரும் அடக்கம்
தூத்துக்குடி: கலவர பூமியாக மாறியுள்ள லிபியாவில் இருந்து இன்று கப்பல் மூலம் 200 தமிழர்கள் தாயகம் புறப்பட்டுள்ளனர். இதில் தலைவன்கோட்டையைச் சேர்ந்த 30 பேரும் அடக்கம்.
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அசோக்குமார், முருகையா ஆகியோர் பலியாகினர். களப்பாகுளத்தைச் சேர்ந்த முத்துகுமார், கழுகுமலை நாயக்கர்பட்டியைச் சேர்ந்த காசிராஜன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
தலைவன்கோட்டையை சேர்ந்த 30 பேரும், ஒரு வாரமாக லிபியாவில் தவித்த வந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைப்படி மத்திய அரசு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை லிபியாவுக்கு அனுப்பியது.
இதையடுத்து கடந்த இரண்டு தினங்களாக இந்தியாவை சேர்ந்த 530 பேர் தாயகம் திரும்பினர். இந்நிலையில் தலைவன்கோட்டையைச் சேர்ந்த படுகாயம் அடைந்த இருவர் உள்பட 30 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 170 பேர் ஆக மொத்தம் 200 பேர் இந்திய நேரப்படி இன்று காலை கப்பலில் புறப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து இன்று இரவு 10 மணிக்கு எகிப்து சென்றடைகின்றனர். பின்னர் விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மதுரைக்கு விமானத்தில் வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை லிபியா நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மணிமேகலை மற்றும் தமிழர்களை வேலைக்கு அழைத்து சென்ற ஹுன்டாய் நிறுவன அதிகாரிகளும் செய்து வருகின்றனர்.
நாளை (புதன்) அல்லது நாளை மறுநாள் (வியாழன்) இவர்கள் 200 பேரும் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லிபியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதிகள் போக மற்ற இடங்களில் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளதால் அங்கு கலவரம் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் தாயகம் திரும்புவது அதிகரிக்கும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications