2ஜி ஒதுக்கீடு: முக்கிய ஆவணங்கள் மாயம், சிபிஐ கண்காணிப்பில் 63 பேர்

2ஜி ஊழல் விவகாரத்தில் கைதான மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் நடந்தது. அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், 2ஜி ஸ்பெக்டரம் உரிமம் பெற்ற குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஆவணங்கள் மட்டும் திடீர் என்று காணாமல் போய்விட்டன. அந்நிறுவனம் தொலைத்தொடர்புத் துறையில் தாக்கல் செய்த முக்கிய ஆவணங்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் சில முக்கிய ஆவணங்களும் மாயமாகியுள்ளன.
ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமம் வழங்கப்பட்டதில் விதி மீறல்கள் நடந்துள்ளன. இந்த விஷயத்தில் ஆ. ராசாவும், பெகுரியாவும் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
இந்நிலையில் சித்தார்த் பெகுரியாவை ஜாமீனில் விடுவித்தால் அவர் சாட்சியங்களையும், ஆவணங்களையும் அழித்து விடுவார் என்று கூறப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
சிபிஐ கண்காணிப்பில் 63 பேர்:
இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் 10 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட 63 பேரை கண்காணித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி அடங்கிய பெஞ்சிடம் சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் சிபிஐயின் கண்காணிப்பின்கீழ் 10 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அவற்றின் அதிபர்கள் உள்ளிட்ட 63 பேர் உள்ளனர் என்றார்.
இதையடுத்து வரும் 10ம் தேதிக்குள் சிபிஐயும், அமலாக்கத் துறையும் தங்களது விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications