விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள்

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை விரைவுபடுத்தியுள்ளது திமுக. இதுவரை பாமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியுடன் இழுபறியாக உள்ளது. இதுவரை எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.
இந்த நிலையில், நேற்று இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்டது திமுக. நேற்று இரவு திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் குழு, அறிவாலயம் வந்து இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. இதன் இறுதியில், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகள் தருவது என முடிவானது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதியுடன் திருமாவளவன் குழுவினர் சந்திப்பை மேற்கொண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். அப்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருமா கட்சியையும் சேர்த்து தற்போது 44 தொகுதிகளைப் பங்கீடு செய்துள்ளது திமுக. இதில் பாமகவுக்கு 31, முஸ்லீம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்னும் 190 சீட்களே கையில் உள்ளன. இதை திமுக, காங்கிரஸ், பிற தோழமைக் கட்சிகளுக்குப் பங்கீடு செய்ய வேண்டும். திமுக இந்த முறை குறைந்தது 130 சீட்களிலாவது போட்டியிட முடிவு செய்துள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 50 சீட்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதிப் பங்கீட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறுகையில்,எங்களுக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. ஆனால் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம், தீவிரக் களப் பணியாற்றுவோம் என்றார்.
முன்னதாக அதிமுகவுடன் சேரப் போகிறார் திருமாவளவன் என்று செய்திகள் கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.
விருப்ப மனு தாக்கல் செய்யலாம்:
இந் நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விருப்ப விண்ணப்பபடிவம், கட்சி அலுவலகத்தில் கிடைக்கும் என்றும், அதனை பூர்த்தி செய்து வழங்குமாறு அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி செய்திக்குறிப்பில், விடுதலைச் சிறுத்தைகளுக்கு வருகிற 2011 சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளை திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வழங்கி இருக்கிறது.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட கூட்டணியை விட மிகவும் வலிமைப்பெற்ற கூட்டணியாக இந்த கூட்டணி அமைந்து இருக்கிறது. ஆக மேலும் பல்வேறு உற்சாகத்தை விடுதலைச்சிறுத்தைகளுக்கு தருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் தலைமை தேர்தல்க்குழு சிறப்பாக பல்வேறு குழுக்களை அமைத்து செயலாற்றி வருகிறது. அதில் தொகுதிக்குழு, பகுதிக்குழு வாக்குசாவடி குழு, விளம்பர குழு, நிர்வாக குழு என பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது.
2011 சட்டமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விருப்ப விண்ணப்பபடிவம் வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பத்தை பூர்த்திசெய்து 5000 ரூபாய் பணமாகவோ, வரையோலையாகவோ வழங்கவேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் தேர்தல் தலைமைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி முதல் விண்ணபமாக பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த பெரம்பலூர் ஒன்றியச்செயலாளர் சீனிவாசன் விண்ணப்பத்தை கொடுத்தார். அதனை கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications