பஸ் தினம் கொண்டாட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
சென்னை : கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சமீப காலமாக பஸ் தினம் என்ற பெயரில் மாணவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள். வழியெங்கும் பெண்களைக் கேலி செய்வது, தட்டிக் கேட்கும் போலீஸாரைத் தாக்குவது என்று சட்டவிரோதமாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.
பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் நடத்திய பஸ் தினக் கொண்டாட்டத்தின்போது பெரும் வன்முறை வெடித்தது. பெண் போலீஸ் துணைக் கமிஷனர் லட்சுமியை ஆபாசமாகத் திட்டி கல் வீசித் தாக்கினர். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கடும் காயமடைந்தார்.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகன் என்பவர் பஸ் தினக் கொண்டாட்டங்களை முறைப்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்று உரியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், வழக்கை வருகிற 14ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்ட கோர்ட், பஸ் தினக் கொண்டாட்டங்களுக்கு அன்று வரை இடைக்காலத் தடையும் விதித்தது.
தடை குறித்த உத்தரவை அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications