கருணாநிதியுடன் நடந்த பேச்சு குறித்து ஐவர் குழுவுடன் ஆசாத் ஆலோசனை
டெல்லி சென்னையில் முதல்வர் கருணாநிதியுடன் தான் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பங்கீட்டுக்கான ஐவர் குழுவுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார் குலாம் நபி ஆசாத்.
தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலைத் தீர்ப்பதற்காக நேற்று இரவு சென்னை வந்த குலாம் நபி ஆசாத் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது காங்கிரஸ் தரப்பில் யாரும் உடன் இருக்கவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்தது. இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து இன்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் காலையில் அந்த சந்திப்பை மேற்கொள்ளாமல் ஆசாத் டெல்லி போய் விட்டார்.
இதனால் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுக்கள் மீண்டும் ஸ்தம்பித்துப் போயுள்ளன. இந்தநிலையில் வருகிற 5ம் தேதி திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் இன்று மாலை ஐவர் குழு அவசரமாக கூடி ஆலோசிக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில்குலாம் நபி ஆசாத்தும் கலந்து கொள்கிறார். கருணாநிதியுடன் தான் நடத்திய பேச்சுக்களின் விவரங்களை அவர்களிடம் ஆசாத் தெரிவிக்கிறார்.
ஐவர் குழுவுடன் ஆலோசனை நடத்தி, கருணாநிதி கூறியவை தொடர்பாக ஐவர் குழுவின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர் சோனியா காந்தியை ஆசாத் சந்திப்பார் என்று தெரிகிறது. அதன் பின்னர் சோனியா என்ன சொல்கிறார் என்பதைப் பொறுத்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும்.