திமுக, அதிமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு இன்றைக்குள் முடியும்?
திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வேகம் பிடித்துள்ளன. மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளால் விரைவாக தொகுதிப் பங்கீட்டை முடித்து, தொகுதிகளை ஒதுக்கி, வேட்பாளர்களை அறிவித்து விட்டு தேர்தல் பிரசாரத்தில் குதிக்க அனைத்து கட்சிகளும் ஆர்வத்துடன் உள்ளன
இருப்பினும் திமுகவில் காங்கிரஸாலும், அதிமுகவில் தேமுதிகவாலும் பெரும் தாமதம் நிலவி வருகிறது. காங்கிரஸுக்குக் கொடுக்கப்படும் தொகுதிகளைப் பார்த்து விட்டு முடிவெடுக்க தேமுதிக காத்திருப்பதாக தெரிகிறது. அதேபோல திமுகவுடன் உடன்பாடு ஏற்படாவிட்டால், தேமுதிகவுடன் இணையலாமா என்ற எண்ணத்தில் காங்கிரஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் தற்போது இந்த இரு கட்சிகளும், தத்தமது கூட்டணியில் கணிசமான தொகுதிகளைப் பெறக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிகிறது.
திமுக கூட்டணியில் இதுவரை பாமக 31, விடுதலைச் சிறுத்தைகள் 10, கொமுக 7, முஸ்லீம் லீக் 3, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 1 என 52 தொகுதிகளை முடித்து விட்டனர். காங்கிரஸ் மட்டுமே பாக்கி உள்ளது. காங்கிரஸுக்கு தொகுதிகளை முடிவு செய்து விட்டால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்.
கடைசியாக கிடைத்த தகவலின்படி காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகளை ஒதுக்க தீர்மானமாகியுள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த 60 தொகுதிகளும் தாங்கள் கூறும் தொகுதிகளாகவே இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் புதிததாக முரண்டு பிடிக்கிறதாம். இதை திமு கஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி கிராமப்புற தொகுதிகளை அதிகம் கேட்கிறது. ஆனால் நகரம், கிராமம் என கலந்துதான் கொடுப்போம் என்று திமுக கூறி விட்டது. ஆனாலும் சுமூக நிலை எட்டப்படும் என்று தெரிகிறது. இன்றைக்குள் உடன்பாடு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுவதால் இன்று இரவுக்குள் அல்லது நாளை பிற்பகலுக்குள் உடன்பாட்டில் இரு கட்சிகளும் கையெழுத்திடும் வாய்ப்புள்ளதாம்.
மறுபக்கம் அதிமுக, தனது கூட்டணியில் 14 கட்சிகளை சேர்த்துக் கொண்டுள்ளதால் தொகுதிகளை இறுதி செய்வதில் திணறிக் கொண்டிருக்கிறது. இதுவரை நான்கு கட்சிகளுக்கு மட்டுமே தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது.
தொகுதி எண்ணிக்கை மற்றும் பிற விஷயங்களில் தேமுதிக இழுத்தடிக் கொண்டிருப்பதால் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய முக்கிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய முடியாத நிலையில் அதிமுக உள்ளது. தேமுதிக தரப்பில் 48 தொகுதிகளைக் கேட்டுள்ளனர். அதில் இரு கட்சிகளுக்கும் இடையே ஏறக்குறைய உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாகவும் இன்றைக்குள் ஜெயலலிதாவை விஜயகாந்த் சந்திக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
மொத்தத்தில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் எப்படியும் நாளைக்குள் தொகுதிப் பங்கீட்டை முடித்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.