ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு தாமஸைப் பரிந்துரைத்தவர் ராசா!
சென்னை: தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு பி.ஜே.தாமஸின் பெயரைப் பரிந்துரைத்தவர் ராசா என்ற விவரம் தெரிய வந்துள்ளது. அதேபோல இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மேலும் இருவர் மு.க.அழகிரியின் சிபாரிசைப் பெற்றவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
மொத்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட மூவரும் திமுக சார்பில் பரிந்துரைக்கப்பட்டவர்கள் என்று தெரிய வருகிறது. இதில் ராசா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட தாமஸுக்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவும் இருந்ததால், அழகிரியின் பரிந்துரையை நீக்கி விட்டு, ராசாவின் பரிந்துரையை மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் ஏற்று தாமஸை நியமித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தாமஸ், முன்பு மத்திய தொலைத் தொடர்புத்துறை செயலாளராக பதவி வகித்தவர் என்பது நினைவிருக்கலாம்.
இந்தத் தகவல்களை பாஜக தரப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பி.ஜே.தாமஸ் தொலைத் தொடர்புத்துறை செயலாளராக இருந்தவர். இவரது பெயரை ராசாதான் மிகவும் உறுதியாக பரிந்துரைத்திருந்தார். அவருக்கு பிரதமர் மற்றும் ப.சிதம்பரத்தின் ஆதரவு இருந்ததால் அவரையே நியமனம் செய்துள்ளனர்.
அதேசமயம், இந்தப் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட மற்ற இருவரான - சுப்பராயன் கிருஷ்ணன் மற்றும் பிஜாய் சாட்டர்ஜி ஆகியோருக்கு மத்திய உரம் மற்றும் ரசாயாணத் துறை அமைச்சர் யமு.க.அழகிரியின் உறுதியான பரிந்துரை இருந்தது. இவர்களில் கிருஷ்ணன், உரத்துறை செயலாளராக இருந்தவர். இவர் தற்போது ஓய்வு பெற்று விட்டார்.
நியமனத்தை முடிவு செய்ய அமைக்கப்பட்ட மூவர் குழுவில் பிரதமர், ப.சிதம்பரம் தவிர எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜும் இடம் பெற்றிருந்தார். அவர் தாமஸை நியமிக்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பும், ஆட்சேபனையும் தெரிவித்தார். எனக்குச் சம்மதம் இல்லை என்றும் எழுதி அவர் கையெழுத்திட்டுள்ளார். இது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தாமஸை நியமிப்பது என்ற முடிவில் பிரதமரும், ப.சிதம்பரமும் மிகவும் உறுதியாக இருந்தனர் என்று பாஜக தரப்பு தெரிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற மிகப் பெரிய ஊழல் வழக்கு தாமஸ் கண்காணிப்பில் வருகிறது. தாமஸ் மீதே ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளபோது இதை எப்படி அவரது கண்காணிப்பில் விட முடியும் என்று முன்பு உச்சநீதிமன்றம் கேட்டது நினைவிருக்கலாம். ஆனால் தாமஸை பரிந்துரைத்தவரே ராசாதான் என்ற விவரம் வெளியாகியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.