பலமான கட்சிகள் இருந்தும் பலவீனமாக காட்சியளிக்கும் அதிமுக கூட்டணி
சென்னை: பலமான கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றிருந்தும் கூட கூட்டணியோ, தொகுதிப் பங்கீடோ இன்னும் இறுதியாகாமல் பலவீனமாக காட்சியளிக்கிறது அதிமுக கூட்டணி.
இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு அவரது ஆலோசகர்கள் கொடுத்த முக்கியமான ஆலோசனை - தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்து விட வேண்டும் என்பதுதான். அதில் வெற்றி பெற்று விட்டார் ஜெயலலிதா. தேமுதிக மட்டுமே இப்போதைக்கு அவரது ஒரே முக்கிய கட்சியாக கண்ணில் தெரிகிறது. மற்றபடி மதிமுக, இடதுசாரிகள் அவருக்கு முக்கியத்துவம் இல்லாத கட்சிகளாக மாறி விட்டன. இவர்களை பெரிய விஷயமாக கூட அவர் நினைக்கவில்லை என்கிறார்கள். எல்லாம், அவரது கருத்து கந்தசாமிகள் கொடுத்த ஆலோசனைப்படியே நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏகப்பட்ட கட்சிகள் இருந்தும் கூட பலவீனமான தோற்றத்தைப் பெற்றுள்ளது அதிமுக கூட்டணி. தற்போதைக்கு தமிழகத்தில் அதிக கட்சிகளை கொண்டுள்ள கூட்டணி அதிமுக மட்டுமே. இவர்களில் தேமுதிகவுக்கு 41, மனித நேய மக்கள் கட்சிக்கு 3, புதிய தமிழகத்திற்கு 2, சரத்குமார் கட்சிக்கு 2, இந்திய குடியரசுக் கட்சி, பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகியோருக்கு தலா ஒரு இடம் என 51 இடங்களை முடித்து விட்டார் ஜெயலலிதா. இன்னும் மதிமுக, இடதுசாரிகளுக்கு மட்டும் தொகுதிகள் தர வேண்டியுள்ளது.
ஆரம்பத்திலிருந்தே திமுகவை விட ஒரு ரவுண்டு வேகமாகவே செயல்பட்டு வந்தார் ஜெயலலிதா. தொகுதிப் பங்கீட்டையும் முடித்து விடக் கூடிய நிலையில்தான் அவர் இருந்தார். ஆனால் இடையில் காங்கிரஸ் கட்சியை இழுக்கும் வாய்ப்பு வந்ததைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வேகம் குறைந்து போய் விட்டது. இப்போது மதிமுக, இடதுசாரிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடிக்காமல் அவர் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.
கட்சிகள் நிறைய இருந்தும், பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்பார்ப்பு ஏகமாக இரு்நதும் கூட அதிமுக அணியால் இன்னும் தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியவி்ல்லை. தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கிறது.
வழக்கமாக ஆளுக்கு முந்தி என்ற ரீதியில், ஜெயலலிதாதான் முதலில் பிரசராத்தைத் தொடங்குவார். அதற்குள் அனைத்து வேலைகளையும் முடித்து, வேட்பாளர்களையும் அறிவித்து விடுவார். ஆனால் இந்த முறை பெரும் தேக்கத்தைக் கண்டுள்ளார் ஜெயலலிதா.
கூட்டணியும், தொகுதிப் பங்கீடும் இன்னும் முழுமை அடையாமல் இருப்பதால் கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே ஒருவித விரக்தி, குழப்பத்தில் மூழ்கிப் போயுள்ளன.












Click it and Unblock the Notifications