அதிமுகவின் காக்க வைக்கும் போக்கு-விலகுகிறார் கார்த்திக்?
சரணாலயம் என்ற அமைப்பை நடத்தி வந்தவர் கார்த்திக். அந்த அமைப்புக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்து அவரை அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி அவரை தனது தமிழக பிரிவுக்குத் தலைவராக்கியது. ஆனால் அவரது போக்கு கட்சியினருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியதால் கட்சியை விட்டு நீக்கி விட்டனர் கார்த்திக்கை.
இதையடுத்து 2009ம் ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கினார் கார்த்திக். கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது கார்த்திக் கட்சி. விருதுநகர் மற்றும் தேனி ஆகிய தொகுதிகள் கார்த்திக் கட்சிக்குக் கிடைத்தது. இதில் விருதுநகரில் கார்த்திக்கும், தேனியில் பார்வதி என்பவரும் போட்டியிட்டனர். இதில் இருவருமே டெபாசிட்டைப் பறி கொடுத்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தார் கார்த்திக். தனது கட்சிக்கு 3 தொகுதிகள் தேவை என்றும் கோரினார். ஆனால் அதற்குப் பின்னர் இதுவரை அதிமுகவிடமிருந்து கார்த்திக்குக்கு அழைப்பு வரவில்லை. அதேசமயம், கார்த்திக் கேட்கும் தொகுதிகளைத் தர முடியாது என்றும் அதிமுக தரப்பு கூறி விட்டதாம். சரி, ஒரு தொகுதியாவது தாருங்கள் என்று கார்த்திக் தரப்பில் கேட்டபோது அதற்கும் பதில் வரவில்லையாம். அதாவது கார்த்திக்குக்கு ஒரு சீட் கூட கிடையாதாம். வெறும் ஆதரவு மட்டுமே போதும் என்று கூறி விட்டார்களாம்.
இதனால் கடுப்பாகியுள்ளார் கார்த்திக் என்கிறார்கள். அதிமுக தன்னை மறுபடியும் அழைக்காவிட்டால், தனித்துப் போட்டியிடுவது என்றமுடிவுக்கு அவர் வரப் போகிறாராம்.
அப்பாடா, பாஜகவுக்கு மீண்டும் கூட்டணிக்கு ஆள் கிடைத்தாயிற்று!