சென்னையில் காரை ஏற்றி தொழிலதிபரைக் கொல்ல முயற்சி: 3 பெண்கள் காயம்-2 பேர் கைது
சென்னை: சென்னையில் தொழில் அதிபரை காரை ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மாம்பலத்தில் வசித்து வருபவர் சுரேஷ்பாபு (45). தொழில் அதிபர். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது நண்பரான தாம்பரத்தைச் சேர்ந்த பிரபாகரனுக்கு ரூ. 25 லட்சம் கடன் கொடுத்துள்ளார். பணத்தை திருப்பிக் கொடுக்காத நிலையில் பிரபாகரன் இறந்துவிட்டார்.
இதையடுத்து சுரேஷ்பாபு பிரபாகரனின் அண்ணன் பாஸ்கரனிடம் சென்று பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில்
பாஸ்கரனை சுரேஷ்பாபு தாக்கியுள்ளார். அதற்காக அவர் மீது வழக்கும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் பாஸ்கரனின் உறவுக்கார பெண்ணை யாரோ சிலர் காரை வைத்து மோதுவது போல சென்றுள்ளனர்.
இதை சுரேஷ்பாபு தான் செய்திருக்க வேண்டும் என்று பாஸ்கரனின் மகன் விக்னேஷ் (22) சந்தேகப்பட்டார். உடனே அவர் நேற்று முன்தினம் இரவு அண்ணா நகரில் வசிக்கும் தனது நண்பர்கள் குமார், பாலாஜி ஆகியோருடன் காரில் சுரேஷ்பாபு வசிக்கும் பகுதிக்குச் சென்றார்.
அப்போது சுரேஷ்பாபு காரில் வெளியே செல்வதைப் பார்த்து அவரை தனது காரில் பின் தொடர்ந்தார். எப்படியாவது சுரேஷ்பாபுவை காரை ஏற்றி கொன்று விட வேண்டும் என்று தீர்மானித்தார். அரங்கநாதன் பாலம் அருகே வைத்து அவரை தீர்த்துக் கட்ட காரை வேகமாக ஓட்டி வந்தார். இதைப் பார்த்த சுரேஷ்பாபு சுதாரித்துக் கொண்டார்.
படத்தில் வருவது போல சுரேஷ்பாபுவின் காரை விக்னேஷ் விரட்டிச் சென்றுள்ளார். வண்டிக்காரன் தெருவில் உள்ள ஒரு குறுக்குச் சந்தில் சுரேஷ்பாபுவின் கார் மீது விக்னேஷின் கார் பயங்கரமாக மோதியது. சுரேஷ்பாபு காரில் இருந்து கீழே குதித்துவிட்டதால் உயிர் தப்பினார்.
இதையடுத்து விக்னேஷ் காரை பின்னால் எடுக்க முயன்றபோது தெருவில் நடந்து சென்ற ரீனா, வேளாங்கண்ணி, பாரதி ஆகிய 3 பெண்கள் மீது கார் மோதியது. இதில் அவர்கள் காயம் அடைந்தனர். உடனே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து விக்னேஷ், குமார் இருவரையும் பிடித்து தங்கள் ஆத்திரம் தீர அடித்தனர். பாலாஜி தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்த குமரன்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விக்னேஷ், குமார் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.