தொகுதிகள் விவகாரம்-தங்கபாலு மீது இளங்கோவன் கடும் தாக்கு
சென்னை: தனக்கு வேண்டிய தொகுதிகளையே திமுகவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் தங்கபாலு. அவர் இப்படியே செயல்பட்டால், தேர்தல் முடிவுகள்...., அவ்வளவுதான் சொல்ல முடியும் என்று மிரட்டல் கலந்த தொணியில் கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
செய்தியாளர்களிடம்அவர் இதுகுறித்துப் பேசுகையில்,
ப.சிதம்பரமும், ஜி.கே.வாசனும்தான் காங்கிரஸ் தோழர்களுக்கும், காங்கி்ரஸ் தோழர்கள் வேண்டுகின்ற தொகுதிகளுக்கும் பாடுபடுகின்றார்களே தவிர, தலைவராக இருக்கின்றவர் அவருக்கும், அவருக்கு வேண்டியவர்களுக்கும் வேண்டிய தொகுதிகளை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இது நியாயமானது அல்ல. இதைப்பற்றி நாங்கள் மேலிடத்திலே சொல்வோம். மேலிடத்தில் சொன்ன தொகுதிகளை கூட அவர் கேட்க மறுக்கின்றார். காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை அவர் கேட்க மறுக்கிறார். ஆகவே இதே நிலை தொடருமேயானால் தேர்தலின் முடிவுகள்... அவ்வளவுதான் சொல்ல முடியும்.
அகமது படேல் நேற்றுமுன் தினம் இரவு இளைஞர் காங்கிரஸில் அவர்கள் கேட்ட தொகுதிகளின் பட்டியலையும், நான் தந்த பட்டியலையும் அவர் இங்கே அனுப்பியிருக்கின்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு. ஆனால் அந்த தலைவர் அந்த தொகுதிகளை கேட்பதே கிடையாது.
குறிப்பாக கோபியை கேட்கவில்லை. அதே போல் ராதாபுரத்தை கேட்கவில்லை. மாதவரம் தொகுதியை கேட்கவில்லை. திருத்தணியை கேட்கவில்லை; ஈரோட்டை கேட்கவில்லை. இப்படி சொல்லிக்கொண்டு போகலாம்.
தங்கபாலுவின் இத்தகையை செயலால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் இழக்கும் நிலை உள்ளது. தங்கபாலு காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே செயல்படுகிறார் என்றார் இளங்கோவன்.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றுச் சிறப்பே அதன் கோஷ்டிப் பூசல்தான். இத்தனை நாட்களாக தொகுதிப் பங்கீட்டுக்காகவும், ஒதுக்கீட்டுக்காகவும் காங்கிரஸார் திமுகவுடன் மோதிக் கொண்டிருந்தனர். இப்போது தொகுதிகள் முடிவாகி விட்ட நிலையில், தற்போது அவர்களுக்குள்ளாகவே மோதிக் கொள்ளும் அடுத்த கட்டம் வந்துள்ளது. இனி பல காங்கிரஸ் தலைவர்கள் தத்தமது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு டெல்லிக்குப் படையெடுப்பதை கண்டு களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications