தேர்தல்: திமுகவுக்கு கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு
காஞ்சிபுரம்: வரும் சட்டசபை தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் 33-வது மாவட்ட மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
திருக்கோவில் மற்றும் வருவாய் துறை ஆவணங்களில் பயன்படுத்தப்படும் பசலி என்ற சொல்லுக்கு பதிலாக நிலவரி ஆண்டு, நில வருவாய் ஆண்டு என மாற்றி நடைமுறைப்படுத்த வேண்டும், வறுமை நிலையில் உள்ள பூசாரிகளுக்கு மாதம் ரூ. 500 உதவித்தொகை, குடியுரிமை பட்டா, கலைஞர் வீடு வழங்கும் திட்ட வீடுகள் ஆகியவை வழங்க வேண்டும், பூசாரி நலவாரியத்தில் திருமண நிதியுதவியை ரூ. 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பது, தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டிற்கு பிறகு சங்க மாநிலத் தலைவர் பி.வாசு கூறியதாவது,
கோவில் பூசாரிகளுக்கு நலவாரியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்திய தமிழக முதல்வருக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பூசாரிகள் குடும்பத்தோடு வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியை 6-வது முறையாக தமிழக முதல்வராக்க தமிழ்நாடு கோவில் பூதாரிகள் நலச்சங்கம் பாடுபடும் என்றார்.












Click it and Unblock the Notifications