சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக திமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி
சேலம்: சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக திமுக தொண்டர் தீக்குளிக்க முயன்ற் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் தெற்கு தொகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். முன்னாள் திமுக மண்டல செயலாளர். அவர் கடந்த சட்டசபை தேர்தலின்போது சேலம் தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். ஆனால் அத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.
இம்முறையும் அவர் சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால் தற்போது திமுக வேட்பாளர்கள் பட்டியலில் சேலம் தெற்கு தொகுதியில் எஸ்.ஆர்.சிவலிங்கம் போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குணசேகரன் ஆதரவாளர்கள் சேலம் பழைய பேருந்து நிலையம் எதிரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது திடீரென ஒருவர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுக்திற்கு எதிராக தீக்குளிக்க முயன்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த போலீசார் அவரை காப்பாற்றினர்.
தகவல் அறிந்த குணசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தார்.
இதனால் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்களுக்கும், குணசேகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.