பார்வர்ட் பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டியைத் தர அதிமுக சம்மதம்
சென்னை: அதிமுக கூட்டணியில் தங்களுக்கு உசிலம்பட்டி தொகுதியைத் தர அதிமுக சம்மதித்துள்ளதாக பார்வர்ட் பிளாக் தலைவர் பி.வி.கதிரவன் தெரிவித்துள்ளர்.
அதிமுக கூட்டணியில் பொங்கிக் குமுறிய கூட்டணிக் கட்சிகளில் முதல் கட்சியாக பார்வர்ட் பிளாக் சமாதானத்திற்கு வந்துள்ளது. இந்தக் கட்சிக்கு அதிமுக 1 இடத்தை ஒதுக்கியிருந்தது. உசிலம்பட்டி தொகுதியை தங்களுக்குக் கொடுக்குமாறு கோரியிருந்தது அக்கட்சி.
ஆனால் தடாலடியாக உசிலம்பட்டிக்கு நீதிபதி என்பவரை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. இதனால் பார்வர்ட் பிளாக் அதிருப்தி அடைந்தது. அதிருப்தியில் இருந்த பிற தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்க பார்வர்ட் பிளாக்கும் முயன்றது.
இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுகநடத்தி வரும் ரகசியக் கூட்டத்தில் பார்வர்ட் பிளாக் தலைவர் கதிரவனும் கலந்து கொண்டார்.
தற்போது இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாக கதிரவன் தெரிவித்துள்ளார். பிற கட்சிகளுடனும் இணக்கமான முறையில் அதிமுக பேச்சு நடத்தி வருவதாகவும் கதிரவன் கூடுதல் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மூன்றாவது அணி என்ற தோழமைக் கட்சிகளின் மிரட்டலை அதிமுக சமாளித்து விட்டதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications