முடிந்து போன பழைய புகார்களை கிளறுவது வருத்தம் தருகிறது-மன்மோகன் சிங்
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் எம்.பிக்கள் யாரும், யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிகள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றன. இதையடுத்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோரினார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு அரசு சார்பில் பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்க தூதரகத் தகவல் பரிமாற்றத்தை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்றும், இன்றும் நாடாளுமன்றம் முடங்கிப் போயுள்ளது.
ஆனால் இதை பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கேபிளில் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் இந்தத் தகவலின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
நானும், வாக்குகளுக்குப் பணம் தருமாறு யாரிடமும் கூறவில்லை. யாரையும் இப்பணியில் நியமிக்கவில்லை என்றார்.
இந்த நிலையில் இதுகுறித்து பிற்பகல் 2 மணியளவில் அவர் லோக்சபாவில் விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அப்போது பிரதமர் கூறுகையில் நடந்து முடிந்து போன பழைய விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கிளறுவது துரதிர்ஷ்டவசமானது.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு சாதகமாக வாக்களிக்குமாறு கூறி காங்கிரஸ் எம்.பிக்கள் யாருக்கும் பணம் தரவில்லை. இந்தப் புகார்களை முழுமையாக நான் நிராகரிக்கிறேன்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கமிட்டி ஏற்கனவே விசாரித்து முடித்து விட்டது. மேலும் மக்களும் கூட இந்தப் புகாரை ஏற்கனவே நிராகரித்து விட்டனர். இதனால்தான் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது.
பழைய விவகாரத்தை, அதுவும் விவாதித்து, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்றை மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சிகள் கிளறுவது ஏமாற்றமளிக்கிறது.
காங்கிரஸ் எம்.பிக்களோ, நானோ, எனது கட்சியோ எந்தவித சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications