For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ தலைமையில் தான் 3வது அணி என்கிறது மதிமுக!

By Shankar
Google Oneindia Tamil News

திருச்சி: கூட்டணியிலிருந்து விலக்கியதன் மூலம் முதல்வர் வேட்பாளராக வைகோவை முன்னிறுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜெயலலிதா என்றார் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத்.

திருச்சியில் வியாழக்கிழமை நிருபர்களிடம் பேசிய அவர் கூறுகையில், "அதிமுக கூட்டணியிலிருந்து விலக்கியதன் மூலம் மதிமுகவுக்கு புதிய வாசலைத் திறந்து வைத்துள்ளார் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இல்லாத அரசாக வருவதற்கு மதிமுகதான் காரணம் என்பதை யாரால் மறுக்க முடியும்?

வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில்தான் மதிமுக உள்ளது. நாங்கள் ஜாதி கட்சி அல்ல. அமைப்பு ரீதியாகவும், கட்டுக்கோப்பிலும் திமுக, அதிமுகவைவிட பலமாகவே உள்ளோம். கூட்டணியில் இருந்தாலும், தனித்து இருந்தாலும் தனித்தன்மையை நாங்கள் இழக்கவில்லை.

எதிர்காலத்தில் தமிழக முதல்வராக வைகோ வருவார். அவரை முதல்வராக முன்னிறுத்தும் வாய்ப்பு எங்களுக்கு இப்போது கிடைத்துள்ளது. மதிமுகவை வெளியேற்றியதன் மூலம் அதிமுக தொண்டர்கள் சோர்வுக்கு ஆளாகியுள்ளனர்.

கூட்டணியில் பல கட்சிகளை வைத்துக் கொண்டு அவர்களை கலந்தாலோசிக்காமல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தன் மூலம் தன்னுடைய முடிவை தானே தேடிக்கொண்டுள்ளார்.

இதனால், மதிமுக களைத்துப் போகாது. நாங்கள் வெண்கலப் பானை. கீழே விழும் சப்தம் கேட்கும்; ஆனால், உடையாது. வைகோவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்கக் கூடாது என்பதற்காகவே, எங்களை கூட்டணியில் இருந்து விலக்கியுள்ளார் ஜெயலலிதா.

திமுக ஆட்சியை அகற்றவும், அதிமுக ஆட்சி வராமல் தடுக்கவும் நாங்கள் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வோம். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்.

மூன்றாவது அணி அமைந்தால் நாங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த அணிக்கு வைகோவை தலைமையேற்ற வைக்க வேண்டும். மற்றவர்கள் தலைமையில் நாங்கள் கூட்டணியில் இடம் பெற முடியாது.

மதிமுகவின் பயணம் எந்தத் திசையை நோக்கி இருக்க வேண்டும் என்பது குறித்து நாளை (மார்ச் 19) சென்னையில் நடைபெறும் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுப்போம்," என்றார்.

இதன்மூலம் தேமுதிக தலைவர் விஜய்காந்த் தலைமையில் 3வது அணி அமைந்தாலும் அதில் வைகோ இடம் பெறுவது சந்தேகமே என்று தெரிகிறது. மேலும் 3வது அணி அமைக்கத் திட்டமிடும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம் ஆகியவை இடையே முழுமையான ஒற்றுமை இல்லை.

இதில் ஒரு கட்சியைக் கூப்பிட்டு வேண்டிய தொகுதிகளை ஜெயலலிதா தந்துவிட்டால் கூட அந்தக் கட்சி மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் ஓடிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் இவர்களை நம்பி களத்தில் குதிக்க வேண்டாம் என்று வைகோவுக்கு அவரது கட்சி நிர்வாகி்கள் ஆலோசனை தந்து வருவதாகவும் தெரிகிறது.

English summary
MDMK propoganda secretary Nanjil Sampath told that they got a chance to project Vaiko as the chief minister candidate in the forthcoming Tamil Nadu elections, due to the exclusion of the party in AIADMK alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X