திமுக கூட்டணியின் வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்-ராமதாஸ்
சென்னை: திமுக கூட்டணியின்வெற்றிக்காக கடுமையாக உழைப்போம். கருணாநிதி 6வது முறையாக முதல்வராக வருவார் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
சென்னையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கொங்குநாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்தனர்.
அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது,
பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக போராடும் பாமகவும், கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் ஓரணியில் இருந்து போட்டியிடுவதில் மகிழ்ச்சி. போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்காக இரண்டு கட்சிகளும் பாடுபடும்.
கலைஞர் 6-வது முறையாக மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்றார்.
ராமதாசுடன் பெஸ்ட் ராமசாமி ஆலோசனை:
திமுக கூட்டணி வெற்றிக்கு எவ்வாறு திட்டம் வகுத்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனருடன் ஆலோசனை நடத்தியதாக கொமுக தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற எவ்வாறெல்லாம் திட்டம் வகுத்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாசுடன் ஆலோசனை நடத்தினோம். திமுக கூட்டணி வோட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற நாங்கள் ஒன்றாக சேர்ந்து உழைப்போம். கலைஞர் 6-வது முறையாக முதல்வராக நாங்கள் பாடுபடுவோம் என்றார்.
கருணாநிதியிடம் ஜெ.குரு, ஜி.கே.மணி வாழ்த்து:
வரும் தேர்தலில் பாமக தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு ஆகியோர் பாமக சார்பில் போட்டியிடுகின்றனர். அவர்கள் இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications