25ல் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு: பொன். ராதாகிருஷ்ணன்
மார்த்தாண்டம்: பாஜக தேர்தல் அறிக்கை வரும் 25-ம் தேதி வெளியிடப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் குழித்துறையில் நடந்தது. இதற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். இதில் தொகுதி வேட்பாளர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது,
தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக டெபாசிட் இழந்தது. ஆனால் பாஜக தான் போட்டியிட்ட 12 தொகுதிகளிலும் டெபாசிட் பெற்றது. சட்டசபை தேர்தலிலும் பாஜக கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. திமுக, காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டபோது திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் திமுகவுடன் எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
எந்த கட்சியிடமும் கையேந்தும் நிலை பாஜகவுக்கு இல்லை. இன்னும் 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சி தமிழகத்தில் வரும். இந்த தேர்தலில் இரட்டை இலக்கில் வெற்றி பெறுவோம். வரும் 25-ம் தேதி சென்னையில் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறோம். அதில் துணிச்சலான பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பிரசாரத்துக்காக அகில இந்திய தலைவர் தமிழகம் வருகிறார். மீனவர்கள் படுகொலையை கண்டித்து மனித உரிமை கவுன்சிலில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்க் கல்விக்கு முன்னுரிமை கொடுக்காத திராவிடக் கட்சிகள்
இதற்கிடையே, தமிழகத்தில் நீண்ட காலமாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியே இருப்பதால் பள்ளிகளில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்று பாஜக தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கடந்த 1967-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 44 ஆண்டு காலமாக தமிழகத்தை திராவிடக் கட்சிகள் தான் ஆட்சி செய்து வருகின்றன. ஆனாலும் இன்னும் பள்ளிகளில் தமிழ் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், சிபிஎஸ்இ முறைகளில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தமிழே தெரியாமல் மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆகலாம் என்கிற நிலைதான் தமிழகத்தில் தொடர் கதையாக உள்ளது.
மத்தியில் திமுக, காங். கூட்டணி ஆட்சி நடக்கும்போதே இலங்கையில் 1 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 25 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட 75 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுவிட்டனர். 15 ஆயிரம் குழந்தைகள் தாய், தந்தையரை இழந்து ஆதரவின்றி நிற்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications