முரசு சின்னம் கிடைத்து விட்டதாக தேமுதிக அறிவிப்பு
சென்னை/மதுரை: தங்களது கட்சிக்கு முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக தேமுதிக கூறியுள்ளது. அதேசமயம், முரசு சின்னத்தை அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்க முடியுமா என்பது குறித்து முடிவெடுத்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தங்களுக்கு நிரந்தர சின்னத்தை ஒதுக்குமாறு கோரி தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை தேர்தல் ஆணையத்தை அணுகின. மேலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கின் விசாரணையின்போது டெபாசிட் இழந்த கட்சிகள் நிரந்தர சின்னம் கோர முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது. இதையடுத்து சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தையே அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தங்களது கட்சிக்கு முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக தேமுதிக கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து, அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முரசு சின்னம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னம் நிலைக்குமா?
அதேசமயம், திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் முரளி மோகன் என்ற பனியன் தொழிலை நடத்தி வரும் தொழிலதிபர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், நான் திருப்பூரை மையமாகக் கொண்டு பனியன் தயாரிப்பு தொழிற்சாலையை நடத்தி வருகிறேன். எனது நிறுவனத் தயாரிப்புகளை முரசு சின்னத்தில் தயாரித்து விற்று வருகிறேன்.
முரசு சின்னத்திற்கு நான் உரிய காப்பிரைட் உரிமையும் வாங்கி வைத்துள்ளேன். எனவே இதை என்னைத் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாது.
ஆனால் நான் வாங்கி வைத்துள்ள அதே முரசு சின்னத்தை அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி வருகிறது. இதனால் எனது தொழில் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே முரசு சின்னத்தை எந்தக் கட்சிக்கும், வேட்பாளருக்கும் தேர்தல் ஆணையம் ஒதுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற பெஞ்ச், இதுதொடர்பாக முடிவெடுத்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என்பது தெரியவில்லை. ஒரு வேளை உயர்நீதிமன்றக் கிளை முரசு சின்னத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டால் தேமுதிகவுக்கு சின்னம் நிலைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications