சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிகிறது
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. நேற்று வரை 1509 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த முறை தேர்தல் அட்டவணை மிகவும் குறுகிய காலத்தைக் கொண்டதாக உள்ளதால் முதல் நாளிலிருந்தே வேட்பு மனுத் தாக்கல் சூடு பிடித்தது.
இந்த நிலையில், நேற்று வேட்பு மனு தாக்கல் அதி வேகம் பிடித்தது. நேற்று மிகவும் நல்ல நாள் என்பதால் முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் நேற்றே மனு தாக்கல் செய்தனர்.
மேலும் அதிமுக, தேமுதிக வேட்பாளர்களும் நேற்று மனு தாக்கல் செய்து முடித்தனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 1052 பேர் மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை மொத்தம் 1509 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனுத்தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. 28ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 30ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம்.