அனுதாபம் தேடி வாக்குகளை கவர கருணாநிதி சதி-ஜெயலலிதா
திருவாரூர்: அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனுதாப ஓட்டுக்களைப் பெறுவதற்காக பல்வேறு சதித் திட்டங்களை கருணாநிதி தீட்டி வருகிறார். எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் இன்று அதிமுக வேட்பாளர் குடவாசல் ராஜேந்திரனை ஆதரித்துப் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா.
அப்போது அவர் பேசுகையில்,
அ.தி.மு.க.,வுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு சதி திட்டங்களில் ஈடுபட இருப்பதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கபட நாடகம் ஆடி அதன் மூலம் அனுதாப ஓட்டுகளை பெற்று விடலாம் என்று வியூகம் வகுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிக் கொண்டு மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டோ அல்லது தனது மகள் கனிமொழி மீது பொய்யாக ஒரு தாக்குதல் நாடகத்தை நடத்தியோ ஓட்டு வாங்க கருணாநிதி முயல்வார் என்று எனக்குத் தகவல் வந்துள்ளது.
எனவே கருணாநிதியின் கபட நாடகத்தில் ஏமாந்து விடாமல் மக்கள் அ.தி.மு.க., வுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.