தேர்தல்: திமுகவுக்கு சிரஞ்சீவி, அதிமுகவுக்கு சந்திரபாபு நாயுடு பிரசாரம்
சென்னை: அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பிரசாரம் செய்யவிருக்கிறார். அவர் திமுக கூட்டணிக்கு பிரசாரம் செய்யும் சிரஞ்சீவிக்குப் போட்டியாக பிரசாரம் செய்கிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்கவிருக்கிறார்.
இதையடுத்து ரசிகர்கள் அதிகம் உள்ள அவரை தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கத்தில் தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும்படி அக்கட்சி கேட்டுக் கொண்டது. காங்கிரஸின் வேண்டுகோளை ஏற்று அவரும் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கத்தின் கரக்பூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்யவிருக்கிறார்.
கேரளாவில் பிரசாரம் செய்வது பற்றி அவர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் அவர் வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கிடையே தமிழகத்திற்கு வரும் சிரஞ்சீவிக்கு கருப்புக் கொடி் காட்ட தமிழ்நாடு தெலுங்கர் முன்னேற்றம் முடிவு செய்துள்ளது.
சிரஞ்சீவிக்குப் போட்டியாக அதிமுகவை ஆதரித்து தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தமிழகத்தில் பிரசாரம் செய்யவிருக்கிறார். அவர் தெலுங்கு மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பார். இதற்காக அவர் ஏப்ரல் முதல் வாரம் தமிழகத்திற்கு வருகிறார்.












Click it and Unblock the Notifications