கருணாநிதிக்கு ஜெயலலிதா புகழாரம்: கார்த்தி சிதம்பரம்
விருத்தாசலம்: திமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்து கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் ஜெயலலிதா என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
விருத்தாசலத்தில் உள்ள காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தில் திமுக கூட்டணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது வேட்பாளர் நீதிராஜனை ஆதரித்தது கார்த்தி சிதம்பரம் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மக்களின் தேவைகளை நன்கு அறிந்து கொண்டு கருணாநிதி தேர்தல் அறிக்கை தயாரித்தார். ஆனால் ஜெயலலிதா திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இலவசங்கள் கொடுப்பதை ஏளமானகப் பேசிய அவரே தற்போது இலவசங்கள் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசோடு திமுக இணக்கமாக இருப்பதால் மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறோம். கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸும், திமுகவும் சேர்ந்து போட்டியிட்டுள்ளதால் ஹாட்ரிக் கூட்டணி ஆகும். எதிர்க கூட்டணியோ குழப்பமான, முரண்பாடான கூட்டணி. விஜயகாந்த் எங்கு பேசினாலும் ஜெயலலிதாவை முதல்வர் ஆக்குவேன் என்று கூறுவதேயில்லை. இதுவே அவர்கள் முரண்பாட்டுக்கு சிறந்த முன்உதாரணம் என்றார்.
கேப்டன் சிப்பாய் ஆகிவிட்டார்
விஜயகாந்த் மீண்டும் விருத்தாசலத்தில் தான் போட்டியிடுவார் என்று நினைத்து நீதிராஜனை இந்த தொகுதி வேட்பாளராக்கினோம். ஆனால் அவர் ரிஷியவந்தியத்திற்கு சென்றுவிட்டார்.
போயஸ் கார்டனுக்கு போகும்போது கேப்டனாக இருந்த அவர், அங்கிருந்து திரும்பி வரும்போது சிப்பாயாக தான் வந்தார். அவர் முதன்முதலாக போட்டியிட்ட இந்த தொகுதியில் தான் புரிந்த சாதனைகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்க வேண்டியது தானே? எதற்காக வேறு தொகுதிக்குச் சென்றார்? ஏனென்றால் இங்கு போட்டியிட்டால் நிச்சயம் தோற்றுவிடுவோம் என்று பயம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி விருத்தாசலத்தில் மட்டுமல்ல, ரிஷிவந்தியத்திலும் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications