போட்டி வேட்பாளர்களுக்கு கல்தா: திருமாவளவன் அதிரடி
மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது கட்சி கட்டுப்பாடுகளை மீறி போட்டி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பது கூட்டணி தர்மமாகும்.
ஆனால் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி சிலர் ஒரு சில தொகுதிகளில் போட்டி வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
கட்சித் தலைமையின் வேண்டுகோளை ஏற்று அவ்வாறு போட்டி மனுக்களைத் தாக்கல் செய்த சிலர் தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
ஆனால் போட்டி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறாத விருத்தாசலம் மருத்துவர் சுலோசனா என்ற சுடர்மதி அய்யாச்சாமி, இராஜன் என்கிற குடந்தை அரசன், சீர்காழி குமாரராஜா, காட்டுமன்னார் கோவில் டாக்டர் நந்தகுமார் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுகின்றனர். அவர்களுடன் கட்சியினர் தேர்தல் வேலை செய்யவோ, எந்தவித அரசியல் தொடர்புகள் வைத்துக் கொள்ளவோ கூடாது.
இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications