கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு திமுக டெபாசிட் இழக்க வேண்டும்-ஜெ. ஆவேசம்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று தேனி, திண்டுக்கல் மாவட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களில் பிரசாரம் செய்து அதிமுக, தேமுதிக, இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
ஆண்டிப்பட்டியில் நடந்த கூட்டத்தி்ல் அவர் பேசுகையில், ஆண்டிப்பட்டி அதி்முக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன், பெரியகுளம் சிபிஎம் வேட்பாளர் லாசர் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
போடிநாயக்கனூரில் நடந்த பிரசாரத்தில் அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கம்பம் தேமுதிக வேட்பாளர் முருகேசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இந்தப் பிரசாரத்தின்போது ஜெயலலிதா பேசியதாவது
ஸ்ரீரங்கத்தில் நான் போட்டியிட்டாலும் ஆண்டிப்பட்டியும் எனது தொகுதிதான். இது எனது தொகுதி என்பதால் திமுக அரசு எந்த நலத் திட்டங்களையும் இங்கு செய்யவில்லை, நிறைவேற்றவில்லை.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் குன்னூர் கண்மாயிலிருந்து வீணாகும் நீரை கோவில்பட்டிக்குத் திருப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தேனி மருத்துவக் கல்லூரி உள் கட்டமைப்பு சீரமைக்கப்படும். காமராஜர் கல்லூரி விரிவுபடுத்தப்படும்.
இன்று தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. எந்தப் பொருளையும்,யாரும் வாங்க முடியவில்லை. கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூகத் தீமைகள் அதிகரித்து விட்டன.
ரூ. 1லட்சம் கோடி கடனை சேர்த்து வைத்ததுதான் கருணாநிதி செய்த சாதனை. தமிழகத்தை சுரண்டி வரும் கொள்ளைக்காரக் குடும்பத்தை விரட்டியடிக்க வேண்டும்.
உலகிலேயே பணக்கார குடும்பம் இன்றைக்கு கருணாநிதி குடும்பம்தான். அவர்கள் குபேரர்களாக மாறியிருப்பதன் ரகசியம் என்ன என்பதை மக்கள் உணர வேண்டும்.
தமிழக மக்கள் சட்டமன்ற தேர்தலை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி திமுக கூட்டணியை முற்றிலுமாக தோற்கடித்து டெபாசிட் இழப்பதில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்கு தோல்வியைத் தர வேண்டும் என்றார்..
போடிநாயக்கனூரில், ஜெயலலிதா பேசுகையில், சொந்த நலனுக்காக நாட்டையே அந்நிய சக்திகளிடம் அடமானம் வைத்தவர் கருணாநிதி.
போடிநாயக்கனூரில், அரசு பொறியியல் கல்லூரி நிறுவப்படும். அங்கு பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். அரசு மருத்துவமனை விரிவுபடுத்தப்படும். போடி நீதிமன்றத்திற்குப் புதிய கட்டடம் கட்டப்படும். மாம்பழக் கூழ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
முன்னதாக நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் விஸ்வாதனை ஆதரித்து ஜெயலலிதா பேசுகையில், திண்டுக்கல்லில் மருத்துவக்கல்லூரி அமைக்க நட்வடிக்கை எடுக்கப்படும். மேலும் பழநி - திண்டுக்கல் இடையே கூடுதல் ரயில் இயக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications