கருணாநிதியின் குடும்ப கொள்ளையை எதிர்த்து மீண்டும் சுதந்திர போராட்டம்-ஜெ
அம்பாசமுத்திரம்: கருணாநிதியின் குடும்ப கொள்ளையை எதிர்த்து மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் நடத்த வேண்டியுள்ளது என அம்பாசமுத்திரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.
அம்பாசமுத்திரம் வடக்கு ரத வீதியில் அம்பாசமுத்திரம் வேட்பாளர் இசக்கி சுப்பையா, சங்கரன்கோவில் வேட்பாளர் கருப்பசாமி, கடையநல்லூர் வேட்பாளர் செந்தூர்பாண்டியன், ஆலங்குளம் வேட்பாளர் ராஜேந்திரன், வாசுதேவநல்லூர் வேட்பாளர் துரையப்பா, தென்காசி வேட்பாளர் நடிகர் சரத்குமார் ஆகியோரை ஆதரித்து அதி்முக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,
அன்று வெள்ளையர்களை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். இன்று கருணாநிதியின் குடும்ப கொள்ளையை எதிர்த்து மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. மத்திய, மாநில ஆட்சியை பயன்படுத்தி கருணாநிதி குடும்பம் எந்த அளவுக்கு பணம் சேர்த்துள்ளது, அவரது பேரன், பேத்திகள், நண்பர்கள் சொத்துகளை ஒன்று திரட்டி பார்த்தால் உலகத்திலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பம் கருணாநிதி குடும்பமாகத்தான் இருக்கும்.
சூழ்ச்சியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும், குஜராத், பீகார், பஞ்சாப்பை விட குறைந்த வளர்ச்சி நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. தமிழக மக்கள் உழைக்கவில்லையா, சேமிக்க வில்லையா, கருணாநிதி குடும்ப நலனுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தியது தான் இதற்கு காரணம். ஒரு தலைமுறைக்கு கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கிடைத்துள்ள பொன்னான வாய்ப்புதான் இந்த தேர்தல். தி்முக கூட்டணி போட்டியிட்ட இடத்தில் எல்லாம் டெபாசிட் இழந்தது என்ற சாதனையை மக்கள் (நீங்கள்) செய்ய வேண்டும். அப்போதுதான் சுரண்டலுக்கு தண்டனை கொடுத்தாக உலகமே பாராட்டும். ஆழ்வார்குறிச்சியில் எஸ்ஐ வெற்றிவேல் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மைதீன்கான் உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இது தான் திமுக அரசின் மனிதாபிமானம். எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நல்லமுறையில் பராமரிக்கப்படும்.
சேரன்மகாதேவி கன்னடியன் கல்வாய், இங்குள்ள வடக்கு கோடை மேலழகியன், தெற்கு கோடை அழகியான், நதியுண்ணி கால்வாய்கள் சீரமைக்கப்படும். மலையோர கிராமங்களில் மின்வேலி அமைக்கப்படும். உழைக்கும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மதுரையில் பறக்கும் பாலம் அமைக்கப்படும்-ஜெ.
முன்னதாக நேற்று மதுரை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
மதுரை ஆன்மிக மாநகரமாகவும், சுற்றுலா நகராகவும் மாற்றப்படும். மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பறக்கும் பாலம் அமைக்கப்படும். சாலை வசதி, புறச்சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை என்று பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
மீண்டும் எம்.ஜி.ஆரின் ஆசியோடு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் ஏழை எளிய மக்களுக்கு 20 கிலோ தரமான அரிசி, பெண்களுக்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும். 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப் டாப், கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
ஏழை எளியோருக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் செலவில் பசுமை வீடுகள் அமைத்து தரப்படும். கேபிள் டி.வி. அரசு உடமையாக்கப்பட்டு, குறைந்த கட்டணத்தில் கேபிள் வசதி வழங்கப்படும்.
முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ், சூரிய ஒளி மூலம் மின் வசதி, நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும். அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications