காமன்வெல்த் ஊழல் வழக்கு-20 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
டெல்லி: காமன்வெல்த் போட்டி ஊழல் குறித்த வழக்கு தொடர்பாக இன்று 20 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
காமன்வெல்த் ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோரின் வீடுகளில் ரெய்டுகளும் நடத்தப்பட்டன. அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது சிபிஐ. டெல்லி வளர்ச்சி குழும அலுவலகம், மத்திய பொதுப் பணித்துறை அலுவலகம், ஜுபிலி ஸ்போர்ட்ஸ் தனியார் நிறுவன அலுவலகம் மற்றும் இவற்றின் அதிகாரிகள், வீடுகள் உள்பட 20 இடங்களில் சோதனை நடந்தது.
காமன்வெல்த் போட்டிக்கு கட்டுமான பணிகளை செய்ததிலும், விளையாட்டு சாதனங்கள் மற்றும் பொருட்கள் வாடகைக்கு வலீங்கியதிலும்தான் பெருமளவு ஊழல் நடந்து இருந்தது. எனவே இதில் சம்பந்தப்பட்டவர்களை குறி வைத்தே இன்றைய சோதனை நடந்தது.
இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது. சோதனையின் இறுதியில் சிலர் கைது செய்யப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.