மலையில் வறட்சி: களக்காடு புலிகள் காப்பகம் இன்று முதல் மூடல்
களக்காடு: களக்காடு வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியால் அங்குள்ள புலிகள் காப்பகம் இன்று முதல் மூடப்படுகிறது.
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு செங்கல்தேரி, முதலிருப்பான், குளிராட்டி, தலையணை, கருங்கல்கலசம், கோழிக்கால், நெட்டேரியன் கால்வாய் உள்ளிட்ட இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் பல உள்ளன.
இங்குள்ள அருவி மற்றும் நீரோடைகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் மலையில் வெயில் கடுமையாக உள்ளது. மழை பெய்யாததால் அருவிகளிலும், நீரோடைகளிலும் போதிய தண்ணீர் இல்லை. இதனால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் வனப்பகுதிகள் தற்போது வெயில் காரணமாக காய்ந்து காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பகம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் சத்யநாதன் கூறுகையில்,
வனப்பகுதியில் காணப்படும் வறட்சியாலும், வறட்சி காலங்களில் ஏற்படும் தீ விபத்தை தடுக்கவும் புலிகள் காப்பகம் மூடப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் காப்பகம் மீண்டும் திறக்கப்படும். இடைப்பட்ட காலங்களில் மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால் காப்பகம் திறக்கப்படும் என்றார்.
புலிகள் காப்பகம் மூடப்பட்டதை அடுத்து மலைக்கு செல்லும் தலையணை நுழைவு கேட் மூடப்பட்டு வன ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications