ஊழலுக்கு எதிராக பெரும் போருக்கு ஆயத்தமாகுங்கள்-அன்னா ஹஸாரே

ஊழல் செய்யும் அரசியல்வாதகிள் உள்ளிடோரை விரைவாக தண்டிக்கும் வகையில் லோக்பால் சட்டத்தைக் கொண்டு வரக் கோரி சமீபத்தில் டெல்லியில் உண்ணாவிரதத்தில் குதித்தார் அன்னா.
அவருடை இந்த காந்திய போராட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு திரண்டது. ஆங்காங்கு மக்கள் பல்வேறு வழிகளில் அமைதியான முறையில் போராட்டங்களில் குதித்ததால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்து போனது.
இதையடுத்து லோக்பால் சட்டம் தொடர்பாக அன்னா கூறிய யோசனைகளை அது ஏற்க முன்வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று அன்னா தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்.
ஆனால் தனது போராட்டம் முடியவில்லை என்றும் இப்போதுதான தொடங்கியுள்ளது என்றும் அன்னா கூறியுள்ளார்.
தனது உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பின்னர் அன்னா செய்தியாளர்களிடம் பேசுகையில், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அத்தனை எம்.பிக்களும் ஒருமித்த ஆதரவைத் தரவேண்டும். தருவார்கள் என எதிர்பார்க்கிறேன். ஒருவேளை அது கிடைக்காவிட்டால், நாம் மிகப் பெரிய போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்.
அதிகாரப் பசி கொண்ட அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை அவ்வளவு எளிதில் கொண்டு வர சம்மதிக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். தாங்கள் அனுபவித்து வரும் அதிகாரங்களை, இழக்க அவர்களுக்கு நிச்சயம் விருப்பம் இருக்காது.
ஆனால் இது மக்களைப் பாதிக்கும் விஷயம். ஊழலால் நாடு சீரழிந்தது போதும். மக்கள் இன்று ஒன்றாக கை கோர்த்துத் திரண்டுள்ளனர். உண்மையில் இது மக்கள் பிரச்சினை. மக்களுக்காக சேவை செய்யத்தான் எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் உள்ளனர். ஆனால் அதை அவர்கள் வசதியாக மறந்து விட்டனர். தங்களது சொத்துக்களைப் பெருக்கவும், வளங்களை அதிகரிக்கவுமே அவர்கள் மும்முரமாக உள்ளனர்.
எனவே ஊழலுக்கு எதிரான போராட்டம் இத்துடன் முடியவில்லை. இதுதான் போராட்டத்தின் ஆரம்பம். இதை விட மிகப் பெரிய போராட்டம் தேவை என்றால் அதை மேற்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார் அன்னா.
லோக்பால் மசோதாவை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என அன்னா மத்திய அரசுக்குக் கெடு விதித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications