சூடு பறக்கிறது தமிழக தேர்தல் பிரசாரம்-நாளையுடன் ஓய்கிறது

பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைவதால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சென்னைக்கு வந்து விட்டனர். அங்கு இன்று இரு தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
முதல்வர் கருணாநிதி தான் போட்டியிடும் திருவாரூக்கு வந்து சேர்ந்துள்ளார். இன்று மாலை திருவாரூரில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் போட்டியிடும் ரிஷிவந்தியத்தில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரால் சரியாகப் பேசக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல், அடிக்கிற வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் விஜயகாந்த்.
மற்ற கட்சிகளின் தலைவர்களும் கூட தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருவதால், பிரசாரம் படு சூடாகியுள்ளது. அத்தனை பேரும் வாக்காளர்களைக் கவர கடைசி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக அமைதியான பிரசாரமாக இது மாறியுள்ளது. திருவிழா போலக் காணப்படும் பிரசாரம், தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப் பிடி நடவடிக்கைகளால் சப்பென்று போய்க் காணப்படுகிறது. சுவர் விளம்பரங்களைக் காணவில்லை, சுவரொட்டிகளைக் காணவில்லை. காது கிழியக் கத்தும் ஒலிபெருக்கிகளைக் காண முடியவில்லை.
திடீர் திடீரென வேட்பாளர்கள் சகிதம் கட்சிக்காரர்கள் வந்து போவதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். நம்ம ஊரில் தேர்தல் நடக்கிறதா என்பதுதான் அத்தனை பேரின் ஆச்சரியமும்.
இப்படி அத்தனை பேரையும், ஆச்சரியத்திலும், அதேசமயம், அரசியல்வாதிகளை கடும் டென்ஷனிலும் ஆழ்த்தியுள்ள சட்டசபைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணிக்கு ஓய்கிறது.












Click it and Unblock the Notifications