கொள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்க சுதந்திரப் போராட்டம்-ஜெ.
தர்மபுரி: அன்று வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்க போராடியது போல இப்போது கொள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்க சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
நேற்று தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் நடந்த பிரசாரத்தின்போது ஜெயலலிதா பேசினார். ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த இந்த கூட்டத்தில் உற்சாகமாகப் பேசினார் ஜெயலலிதா
அவர் பேசியதாவது:
நான் முதல்வராக இருந்தபோது இலவச சைக்கிள் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், இலவச பாட புத்தகம், மழை நீர் சேகரிப்பு திட்டம் என பல்வேறு திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது.
தொழில் வளம் பெருகி இருந்தது. சட்டம்-ஒழுங்கு சீராக இருந்தது. ஆனால் இன்று கருணாநிதி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கை சீராக வைக்க முடிந்ததா? முடியவில்லை. அதை என்னால் மட்டுமே செய்ய முடியும். கருணாநிதியால் 5 ஆண்டுகளாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. மின்வெட்டையும் போக்க முடியவில்லை.
நான் ஆட்சிக்கு வந்தால் கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்குவேன். நிச்சயமாக அதை செய்வேன். என்னால் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.
சுதந்திர போராட்டத்திற்காக வெள்ளையனை எதிர்த்து எப்படி போராட்டம் நடத்தினோமோ, அதுபோல தமிழ்நாட்டை மீட்க மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் நடத்த வேண்டியது உள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொன்னான வாய்ப்பு தான் இந்த தேர்தல். கின்னஸ் சாதனை பத்தகத்தில் இடம் பெறும் வகையில் தி.மு.க. போட்டியிடும் அனைத்து இடங்களிலும் அவர்களை டெபாசிட் இழக்கச் செய்து காட்ட வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து தர்மபுர மாவட்டத்தில் நடந்த இன்னொரு பிரசாரத்தின்போது ஜெயலலிதா பேசுகையில்,
தி.மு.க. ஆட்சியில் மின் வெட்டு, விலைவாசி உயர்வு, ரவுடிகளின் அட்டகாசம், மணல் கடத்தல், அரிசி கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என அனைத்து விதமான சமூக விரோத செயல்களும் தலை விரித்தாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. பொது மக்கள் எந்த வித தொழிலையும் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. இத்தகைய அவல நிலையில் இருந்து தமிழகத்தை இந்த தேர்தல் மூலம் வாக்காளர்களாகிய நீங்கள் மீட்டு எடுக்க வேண்டும்.
தற்போது தமிழகம் பீகார், பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களை விட பின் தங்கிய நிலைக்கு சென்றுவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இது தான் வாய்ப்பு.
தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் விலைவாசி உயர்வுக்கு காரணமான கடத்தல், பதுக்கல் ஆகியவற்றில் அவர்களுக்கு பங்கு செல்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அனைத்து துறைகளிலும் முன்னணி பெற்ற மாநிலங்களில் ஒன்றாக தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கிருஷ்ணகிரியில் நடந்த பிரசாரத்தின்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தின் உளவுத்துறை காவல் கண்காணிப்பாளர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், காவல் துறை வாகனங்களில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் நம்ப தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரின் உறவினரான அவரை வேறு மாநிலத்துக்கு தேர்தல் பணிக்கு மாற்ற வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கிருஷ்ணகிரி அரசினர் ஆஸ்பத்திரி நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும். கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலன் கருதி சர்க்கரை ஆலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். குளிர்பதன நிலையம் அமைக்கப்படும். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர், தளி, வேப்பனஅள்ளி, ஊத்தங்கரை, ஓசூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications