விக்கிரவாண்டி பஞ்சாயத்துத் தலைவர் கொலை-'தேர்தல் தள்ளி வைக்கப்படாது'
சென்னை : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பேரூராட்சித் தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்தது. ஆனால் அந்தக் கோரிக்கையை தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நிராகரித்து விட்டார்.
விக்கிரவாண்டியில் பேரூராட்சித் தலைவர் அர்ஜூனன் என்பவர் இன்று படுகொலை செய்யப்பட்டார். இதனால் விக்கிரவாண்டியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500 ஆயுதம் தாங்கிய போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் மூளாமல் இருக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த நிலையில், இங்கு நாளை நடைபெறவுள்ள தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி விக்கிரவாண்டி சென்று நேரில் ஆய்வு செய்தார்.
இதற்கிடையே, திமுகவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறுகையில், ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்தால் மட்டுமே தேர்தலை தள்ளி வைக்க சட்டத்தில் இடமுள்ளது.
தற்போது விக்கிரவாண்டியில் பஞ்சாயத்துத் தலைவர் இறந்துள்ளதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என திமுக கோரிக்கை வைத்தது. ஆனால் அதற்கான வாய்ப்பில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications