கருணாநிதிதான் மீண்டும் முதல்வராவார்: திருமாவளவன்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பாவரசுவை ஆதரித்து அவர் நேற்று பிரச்சாரம் செய்கையில், கடந்த 5 ஆண்டுளில் திமுக அரசு செய்த திட்டங்களில் கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும், கலைஞர் வீட்டு வசதி திட்டம் மிகவும் அருமையான திட்டம். இத்திட்டத்தால் தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர் சமூக மக்களும் அதிக அளவில் பயனடைந்தனர்.
தமிழகத்தில் உள்ள 21 லட்சம் கூரைவீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 3 லட்சம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியின் திட்டத்தை ஜெயலலிதா அழித்து விடுவார். இத்திட்டம் மீண்டும் தொடர தமிழகத்தில் 6வது முறையாக கருணாநிதி முதல்வராக வேண்டும்
தமிழ்நாட்டை ஆள முழு தகுதி யாருக்கு உள்ளது என்று வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும். கருணாநிதி 1938ம் ஆண்டில் இருந்து கடந்த 75 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட எதிரே உள்ளவர்களுக்கு தகுதி வேண்டும். சினிமா நடிகர்களின் முகத்தைப் பார்த்தால், தமிழக மக்கள் வாக்கு அளித்து விடுவார்கள் என எதிரணியினர் நம்புகிறார்கள். ஜெயலலிதா எம்ஜிஆருடன் நடித்ததால் 10 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தார். அது போதாதா?
குடும்ப அரசியலைப் பற்றி பேசும் நடிகர் விஜயகாந்த், தனது மனைவி, மைத்துனரை கட்சிக்கு அழைத்து வந்துள்ளது ஏன்?.
கருணாநிதியின் மகன் ஸ்டாலினோ மிசாவில் கைதாகி அடிவாங்கி, பின்னர் இளைஞர் அணி தலைவராகி கட்சியின் பொருளாளர் ஆகி அதன் பின்னரே துணை முதல்வரானார். இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதைவிட யார் வெற்றி பெறக்கூடாது என்பதுதான் முக்கியம். எனவே தமிழகத்தில் 6வது முறையாக கருணாநிதி முதல்வராக எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications