நான் போடும் முதல் கையெழுத்து பாட்டாளி மக்களின் வறுமையைப் போக்கும்-கருணாநிதி

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
கேள்வி - கடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல் கையெழுத்தாக இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தில் கையெழுத்திட்டீர்கள். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்றால் உங்களின் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும்?
கருணாநிதி: அது எந்த கையெழுத்தாக இருந்தாலும், அந்த கையெழுத்து ஏழை எளிய, பாட்டாளி மக்களின் வறுமையை போக்குகின்ற வகையில் இருக்கும்.
கேள்வி: தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்கள். பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்துர்கள். திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
கருணாநிதி: அமோக வெற்றி வாய்ப்பு உள்ளது.
கேள்வி: உங்கள் சொந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள். சொந்த ஊரில் தேர்தலை சந்திக்கும்போது உங்கள் எண்ணம் எப்படி இருக்கிறது?
கருணாநிதி: நீண்ட காலத்திற்கு முன்பே நான் அங்கு போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த தொகுதி தனி தொகுதியாகி விட்டது. எனவே நான் போட்டியிட முடியவில்லை. தற்போது அந்த தொகுதி பொது தொகுதி என்று அறிவிக்கப்பட்டவுடன் நான் அங்கு போட்டியிட வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.
கேள்வி: இந்த தேர்தல் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இரு அணியிலும் பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மூத்த அரசியல் வாதியாக, வாக்காளர்கள் இந்த தேர்தலை எப்படி அணுக வேண்டும் என்று வாக்காளர் என்ற ரீதியில் எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்?
கருணாநிதி: வாக்காளர் என்ற முறையில், நாம் அளிக்கின்ற வாக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பயன்படுமா, நன்மைகளை பெருக்குமா, நலன்களை சேர்க்குமா என்ற இந்த கேள்விகளுக்கெல்லாம் நாம் பதில் அளிக்க வேண்டும். அப்படி அளிக்கக் கூடிய பதில் நமக்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருந்தால், இதை உருவாக்குவதற்கு நடைமுறைப்படுத்துவதற்கு எந்த கட்சியாக இருக்க முடியும்.
வீட்டுக்கு ஒரு வேலைக்காரரை தேர்ந்தெடுக்கும்போது இதற்கு முன்பு வேலை செய்திருக்கிறாரா. நல்ல முறையில் வேலை செய்திருக்கிறாரா என்பதை பார்த்து நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் நம்பிக்கைக்கு உரியவர்கள், நன்பகத்தன்மை உள்ளவர்கள் யார் என்பதை ஒரு வாக்காளர் எண்ணிப் பார்த்தால் அவரால் ஒரு நல்ல முடிவு எடுக்க முடியும். யாருக்கு வேண்டுமானாலும் வாக்களித்து விட்டால் வீடும் பயன்படாது. நாடும் பயன்படாது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications